‘என் கரியருக்கு புத்துயிர் கொடுத்தவர் டில்லி பாபு’ - அசோக் செல்வன் உருக்கம்!

By செய்திப்பிரிவு

சென்னை: “டில்லி பாபு என் கரியருக்கு புத்துயிர் கொடுத்தார். ’ஓ மை கடவுளே’ படம் வெளியாவதற்கு முன்பு வரை எனக்கு இண்டஸ்ட்ரியில் மார்க்கெட் இருந்ததில்லை. இருந்தாலும் அவர் எனக்காக பணம் கொடுத்தார். அவர் கொடுத்த பாதையில் தான் நான் பயணிக்கிறேன்” என அசோக் செல்வன் உருக்கமாக பேசியுள்ளார்.

தமிழில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி. ’உறுமீன்’, ‘மரகத நாணயம்’, ‘ராட்சசன்’, ‘பேச்சிலர்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ளது. இதன் நிறுவனர் டில்லி பாபு கடந்த செப்டம்பர் 9 அன்று காலமானார். அவரது மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் மறைந்த டில்லி பாபுவின் குடும்பம், நண்பர்கள் மற்றும் திரையுலகினர் கலந்து கொண்ட நினைவேந்தல் கூட்டம் இன்று (செப்.23) சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பேசிய இயக்குநர் ஏஆர்கே சரவண், “இந்த மாதிரி நிகழ்வில் நான் கலந்து கொள்வேன் என நினைக்கவே இல்லை. ‘மரகத நாணயம் 2’ தொடங்கி பல நிகழ்வுகளுக்கு திட்டமிட்டிருந்தோம். முதல் பட இயக்குநருக்கு இப்படி ஒரு தயாரிப்பாளர் கிடைப்பது வரம். பல வகைகளில் எனக்கு நம்பிக்கையாக இருந்தார். அவரிடம் இருந்த மனிதம் என்ற விஷயத்திற்காக தான் இத்தனை பேர் வந்திருக்கிறீர்கள் என நம்புகிறேன். ஜூன் 22 அன்று தான் அவரை கடைசியாக சந்தித்தேன். ஒருவருடைய புகைப்படம் பார்த்து அழுகை வருகிறது என்றால் எந்த அளவுக்கு நல்ல மனிதர் என்பதை புரிந்து கொள்ள முடியும். இதில் இருந்து நிச்சயம் நாம் மீண்டு வந்து அவர் பாதையைத் தொடர்வோம்.” என்றார்.

இயக்குநர் ராம்குமார் பேசுகையில், “என்னுடைய ‘ராட்சசன்’ கதையை 35 பேர் நிராகரித்தார்கள். எனக்கு சினிமா மேல் வெறுப்பே வந்துவிட்டது. 36ஆவது நபராக தான் டில்லி பாபுவிடம் கதை சொன்னேன். கேட்டவுடன் உடனே ஒப்புக்கொண்டு வேலையை ஆரம்பித்தார். 35 பேர் நிராகரித்தார்கள் என்றாலும் அவர் என் மேல் சந்தேகப்படாமல் நம்பிக்கை வைத்தார். பல விதங்களில் எனக்கு நம்பிக்கை கொடுத்தார். நம் மேல் நம்பிக்கை வைக்கும் நபர்கள் கிடைப்பது கஷ்டம். அப்படியான ஒருவரை நான் இழந்திருப்பது பெரும் இழப்பு. அவரை இந்த சமயத்தில் நன்றியோடு நினைவு கூறுகிறேன்.” என்றார்.

நடிகர் அசோக் செல்வன் பேசும்போது, “டில்லி பாபு என் கரியருக்கு புத்துயிர் கொடுத்தார். அவர் என்னையும் என் சகோதரியையும் மிகவும் அக்கறையுடன் வழிநடத்தினார். ‘ஓ மை கடவுளே’ படம் வெளியாவதற்கு முன்பு வரை எனக்கு இண்டஸ்ட்ரியில் மார்க்கெட் இருந்ததில்லை. இருந்தாலும் அவர் எனக்காக பணம் கொடுத்தார். அவர் கொடுத்த பாதையில் தான் நான் பயணிக்கிறேன். அவரது தயாரிப்பு நிறுவனத்திற்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். அவர்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE