நாளுக்கு நாள் கூடும் வசூல் - ‘லப்பர் பந்து’ படக்குழு மகிழ்ச்சி

By ஸ்டார்க்கர்

மக்கள் மத்தியில் கிடைத்துள்ள வரவேற்பினால், ‘லப்பர் பந்து’ படத்தின் வசூல் அதிகரிக்க தொடங்கியிருக்கிறது.

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தினேஷ், ஹரிஷ் கல்யாண் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘லப்பர் பந்து’. பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் செப்டம்பர் 20-ம் தேதி வெளியானது. பெரும் எதிர்பார்ப்பு எதுவுமின்றி வெளியிடப்பட்டது.

ஆனால், படத்திற்கு விமர்சகர்கள் அனைவருமே ஏகோபித்த ஆதரவினை அளித்தார்கள். இதனை வைத்து படக்குழுவினரும் விளம்பரப்படுத்த தொடங்கினார்கள். இதனால் படத்தின் வசூல் முதல் நாளை விட 2-ம் நாள் இரண்டு மடங்காக அதிகரித்தது. தற்போது 2-ம் நாளை விட இரண்டு மடங்கு அதிகமாக 3-ம் நாள் கிடைத்திருப்பதாக வர்த்தக நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்தப் படத்தின் தமிழக உரிமை ரூ.5 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போதைய வசூல் நிலவரப்படி இந்த ரூ.5 கோடியை இன்னும் 2 நாட்களில் எடுத்துவிடுவார்கள். அதற்கு பின்பு வருவது அனைத்துமே லாபம் தான் என்கிறார்கள்.

இந்தளவுக்கு வரவேற்பு கிடைத்திருப்பதால், படக்குழுவினரும் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இயக்குநர் வெற்றிமாறன், பா.ரஞ்சித் உள்ளிட்ட இயக்குநர்களும் படம் பார்த்துவிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE