‘டாணாக்காரன்’ பட இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகும் ‘கார்த்தி 29’ - படக்குழு அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகர் கார்த்தி நடிக்கவுள்ள 29-வது படத்தை ‘டாணாக்காரன்’ பட இயக்குநர் தமிழ் இயக்குகிறார். இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை படத் தயாரிப்பு நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. ‘கார்த்தி 29’ என இப்போதைக்கு இந்தப் படம் அறியப்படுகிறது. இந்தப் படம் குறித்த அறிவிப்பில் கப்பல் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதோடு நிறைய சர்ப்ரைஸ்கள் காத்திருக்கிறது என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தப் படத்தின் கதைக்களம் வரலாற்று பின்னணியில் இருக்கக்கூடும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தப் படம் அடுத்தாண்டு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் தமிழ் இயக்கிய டாணாக்காரன் திரைப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது. இதில் விக்ரம் பிரபு, லால், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் நடித்திருந்தனர். இவர்களது பாத்திரம் இதில் பேசப்பட்டது. இயக்குநர் தமிழ் ‘ஜெய் பீம்’ படத்தில் குருமூர்த்தி என்ற காவல் துறை உதவி ஆய்வாளராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்தி நடிப்பில் ‘மெய்யழகன்’ படம் விரைவில் வெளியாக உள்ளது. இதில் அரவிந்த்சாமி அவருடன் இணைந்து நடித்துள்ளார். தற்போது ‘சர்தார் 2’ படத்தில் கார்த்தி நடித்து வருகிறார். அதன் பிறகே ‘கார்த்தி 29’ பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE