நந்தன் படப்பிடிப்பில் சசிகுமாரை கொடுமைப்படுத்தி இருக்கிறேன்: இயக்குநர் இரா.சரவணன் வருத்தம்

By செய்திப்பிரிவு

சசிகுமார் நாயகனாக நடித்துள்ள படம், ‘நந்தன்’. ‘கத்துக்குட்டி’, ‘உடன் பிறப்பே’ படங்களை இயக்கிய இரா.சரவணன் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். ஸ்ருதி பெரியசாமி, மாதேஷ், பாலாஜி சக்திவேல், சமுத்திரக்கனி, ஜி.எம்.குமார் உட்பட பலர் நடித்துள்ளனர். ஆர்.வி.சரண்ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

இயக்குநர் இரா. சரவணன் பேசும்போது, “இந்தப் படத்தின் கதையை எழுதியபோது, வேறு சில கதாநாயகர்களை மனதில் வைத்துதான் எழுதினேன். அவர்களைத்தான் தேடிப் போனேன். ஆனால் எப்போதும் எனக்கு அண்ணனாக, முதுகெலும்பாக இருக்கும் சசிகுமார் சார், நான் செய்கிறேன் வா என்றுசொன்னார். அந்தப் பெருந்தன்மை வேறு யாருக்கும் வராது. ஆனால் என்னை நம்பி வந்த சசிகுமார் சாரை, நான் எவ்வளவு மரியாதையாக நடத்தி இருக்க வேண்டும்.

ஆனால் அப்படி நடத்தவில்லை, இனி மேல் இவனுக்கு உதவியே செய்யக்கூடாது என அவர் நினைக்கும் அளவுக்குக் கொடுமைப்படுத்தி இருக்கிறேன். படப்பிடிப்பின் கடைசி சில நாட்கள், அவரை சிரமத்துக்கு உள்ளாக்கினேன். படத்தின் இரண்டாவது கதாநாயகன் பாலாஜி சக்திவேல். அவரிடம் சொல்லும்போது, சார் இந்தப் படத்தில் நீங்கள் தான் நாயகன் என்று சொன்னேன். முதல் பாடலே அவருக்குத் தான் வைத்திருக்கிறேன், எந்த கட்டத்திலும், எந்த சூழ்நிலையிலும், நிதானமாக இருங்கள் எனும் சிறந்த பண்பை, அவரிடம் கற்றுக் கொண்டேன்” என்றார்.

விழாவில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர். டிரைடன்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் இந்தப் படத்தை வரும் 20-ம் தேதி வெளியிடுகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE