‘கோழிப்பண்ணை செல்லதுரை’ உலக மக்களுக்கும் பிடிக்கும்: சீனு ராமசாமி

By செய்திப்பிரிவு

விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் டாக்டர் பி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து தயாரித்துள்ள படம், ‘கோழிப்பண்ணை செல்லதுரை'. சீனு ராமசாமி இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஏகன் நாயகனாக அறிமுகமாகிறார். யோகி பாபு, பிரிகிடா, சத்யதேவி, பவாசெல்லத்துரை, லியோ சிவகுமார், தினேஷ், மானஸ்வி கொட்டாச்சி, ரியாஸ்உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அசோக்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ளார். வரும் 20-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தை சக்தி பிலிம் ஃபேக்டரி சக்திவேலன் வெளியிடுகிறார்.

இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் இயக்குநர் சீனு ராமசாமி பேசும்போது, “இந்தப் படம் முக்கியமான விஷயத்தைப் பேசி இருக்கிறது. ‘வாழ்க்கை என்னைக் கைவிட்டு விட்டது, வாழப் பிடிக்கவில்லை, எனக்கென்று யாரும் இல்லை’ என்று யாராவது நினைத்தால் அவர்களுக்கு இதில் ஒரு செய்தி இருக்கிறது. இந்த பிரபஞ்சம் எந்த ஒரு தனி மனிதனையும் கைவிடுவதில்லை. ஏதேனும் ஒரு ரூபத்தில் உங்களை அரவணைத்துக் காக்கும்.

யோகி பாபு கதையைக் கேட்காமல் இந்தப்படத்தில் ஏகனின் பெரியப்பாவாக அற்புதமாக நடித்திருக்கிறார். ஏகன்-யோகி பாபு கூட்டணியில் படத்தில் இடம் பெறும் காட்சி ஒன்று இருக்கிறது. உணர்வுப்பூர்வமாகவும், மவுனமாகவும் இருக்கும் இந்தக் காட்சியில் இருவரின் நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவரும். அந்த வகையில் ஏகனுக்குத் தேசிய மற்றும் சர்வதேச விருதுகள் காத்திருக்கின்றன. இந்தப் படத்தில் தமிழக முதல்வர் மகளிருக்கு வழங்கிய இலவச பேருந்து பயண சலுகைகள், அரசு மருத்துவமனைகளின் பலன்கள் குறித்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்தத் திரைப்படம் உள்ளூர் மக்களுக்கு மட்டுமல்லாமல் உலக மக்களுக்கும் பிடித்ததாக இருக்கும்” என்றார். நடிகர் விஜய் சேதுபதி, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE