“நம்முடைய கஷ்டங்களை சினிமாவுக்குள் கொண்டு வரக்கூடாது” - சசிகுமார் 

By செய்திப்பிரிவு

சென்னை: “நாம் படும் கஷ்டங்களை மக்களிடம் சொல்வதில் எந்த பலனும் இல்லை. எப்படி இருந்தாலும் படம் பிடித்துவிட்டால் அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். நம்முடைய கஷ்டங்களை சினிமாவுக்குள் கொண்டு வரக்கூடாது. மக்கள் ரசிக்கும்படி இருந்தால்தான் அதை அவர்கள் பார்ப்பார்கள்” இவ்வாறு நடிகர் சசிகுமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேட்டி ஒன்றில் சசிகுமார் கூறியிருப்பதாவது: “அயோத்தி படத்துக்கு முன்பு தரமான படங்களில் ஏன் நடிக்கவில்லை என்று பலரும் கேட்கின்றனர். அப்போது எனக்கு நிறைய கடன் இருந்தது. ஒரு நல்ல கதையை தேர்வு செய்வதற்கான வாய்ப்பும் நேரமும் எனக்கு கிடைக்கவில்லை. அத்தனை கடன்காரர்களையும் நான் சமாளிக்க வேண்டும். இப்போது கடனிலிருந்து வெளியே வந்துவிட்டேன். அதன் பிறகுதான் எனக்கு பிடித்த கதைகளில் நடிக்க முடிகிறது. இப்படியான படங்கள் ஓடுகிறது, ஓடவில்லை அது வேறு விஷயம். காரணம் எந்த படமாக இருந்தாலும் வெற்றி, தோல்வி இரண்டுமே இருக்கும். ஆனால் பிடித்த கதையில் நடிக்கிறோம் என்பதே ஒரு திருப்திதான். ஒரு உணவை பசிக்கு சாப்பிடுவது வேறு, ருசிக்கு சாப்பிடுவது வேறு.

இப்போது நான் என் பசியை போக்கிவிட்டேன். இனி நான் ருசியாக சாப்பிட்டு அந்த ருசியை ஆடியன்ஸுக்கும் தரவேண்டும். அதுதான் ’அயோத்தி’ ‘நந்தன்’ போன்ற படங்களை நான் தேர்வு செய்ய காரணம். சினிமாவை பொறுத்தவரைக்கும் பார்வையாளர்கள் நாம் கொடுக்கும் படத்தை மட்டும்தான் பார்ப்பார்கள். நாம் படும் கஷ்டங்களை அவர்களிடம் சொல்வதில் எந்த பலனும் இல்லை. எப்படி இருந்தாலும் படம் பிடித்துவிட்டால் அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். நம்முடைய கஷ்டங்களை சினிமாவுக்குள் கொண்டு வரக்கூடாது. மக்கள் ரசிக்கும்படி இருந்தால்தான் அதை அவர்கள் பார்ப்பார்கள்” இவ்வாறு சசிகுமார் தெரிவித்துள்ளார்.

‘அயோத்தி’, ‘கருடன்’ படங்களுக்குப் பிறகு சசிகுமார் நடிப்பில் விரைவில் வெளிவர விருக்கிறது ‘நந்தன்’ திரைப்படம். ‘கத்துக்குட்டி’, ‘உடன் பிறப்பே’ ஆகிய படங்களைத் தொடர்ந்து இரா.சரவணன் எழுதி, இயக்கியிருக்கும் அவருடைய மூன்றாவது படம் இது. படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE