கவுதம் கார்த்திக்கின் புதிய படம் அறிவிப்பு

By ஸ்டார்க்கர்

சென்னை: கவுதம் கார்த்திக் நடிக்கவுள்ள புதிய படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இயக்குநர் ராஜூமுருகனின் உதவி இயக்குநர் தினா ராகவன் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

நடிகர் கவுதம் கார்த்திக் தனது பிறந்த நாளை இன்று (செப். 12) கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு அவருடைய புதிய படம் குறித்த அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார் ‘டாடா’ இயக்குநர் கணேஷ் கே.பாபு. எம்.ஜி ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் ஏ.பி.வி மாறன் மற்றும் இயக்குநர் கணேஷ் கே.பாபு இந்தப் படத்தை இணைந்து தயாரிக்கிறார்கள். இந்தப் படத்துக்கு இயக்குநர் ராஜுமுருகன் வசனம் எழுதுகிறார். அவரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த தினா ராகவன், இந்தப் படத்தின் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இந்தப்படம் குறித்து இயக்குநர் தினா ராகவன் கூறியதாவது, “தென்சென்னையில் உள்ள தரமணி போன்ற பகுதியில் நடக்கும் உள்ளூர் அரசியலை, எளிமையான சம்பவங்களாலும் உண்மைக்கு நெருக்கமாகவும் அரசியல் நையாண்டிகள் கலந்தும் சொல்ல முயற்சிக்கும் படமாக இதை உருவாக்க இருக்கிறோம். சாமானியனின் யதார்த்த வாழ்வியலோடு அரசியலை சற்று காமெடி கலந்து சொல்வது தான் இந்த படம். இந்த படத்தில் கவுதம் கார்த்திக்கின் கதாபாத்திரத்தை அரசியலில் இருக்கும் ஏரியா பையன் போன்று உருவாக்கி இருக்கிறோம். இதுவரை அவர் நடித்ததில் மிகவும் வித்தியாசமான கதாபாத்திரமாக இது இருக்கும். அவரது கதாபாத்திரம் நம் வீட்டில் இருக்கும் ஒருவர் போன்ற உணர்வை ஏற்படுத்தும்.” என்று கூறியுள்ளார்.

இந்தப் படத்தில் கவுதம் கார்த்திக்குடன் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பை விரைவில் படக்குழு அறிவிக்கவுள்ளது. விரைவில் படப்பிடிப்பை தொடங்கி, அடுத்து ஆண்டு கோடை விடுமுறைக்கு படத்தினை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE