முன்னணி தயாரிப்பாளர் டில்லி பாபு காலமானார்

By ஸ்டார்க்கர்

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரான டில்லி பாபு காலமானார்.

தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக வலம் வரும் நிறுவனம் ஆக்சிஸ் ஃபிலிம் பேக்டரி. இதன் நிறுவனர் ஜி.டில்லி பாபு. கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் சிகிச்சை எடுத்து வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று (செப்.9) அதிகாலை காலமானார். இவருடைய மறைவு திரையுலக பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தி இருக்கிறது. திரையுலகினர் பலரும் இவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

2015-ம் ஆண்டு ‘உறுமீன்’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் டில்லி பாபு. அதனைத் தொடர்ந்து ’மரகத நாணயம்’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘ராட்சசன்’, ‘ஓ மை கடவுளே’, ‘பேச்சிலர்’, ‘மிரள்’ மற்றும் ‘கள்வன்’ உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். இதில் ‘மரகத நாணயம்’, ‘ராட்சசன்’, ‘ஓ மை கடவுளே’ மற்றும் ‘பேச்சிலர்’ ஆகிய படங்கள் மாபெரும் வரவேற்பினை பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதும் தொடர்ச்சியாக படங்கள் தயாரிப்பதற்கு பல்வேறு இளம் இயக்குநர்களுக்கு முன் தொகை கொடுத்து ஒப்பந்தம் செய்திருந்தார். தனது மகனை நாயகனாக்க வேண்டும் என்பது இவருடைய கனவு. ’வளையம்’ என்ற பெயரில் தனது மகன் தேவ் நடிக்க ஒரு படத்தினை தயாரித்து வந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE