சென்னை: ஓடிடியில் ‘தி கோட்’ வெளியாகும்போது, அதில் முழுமையான காட்சிகளைக் கொடுக்க படக்குழு முடிவு செய்திருக்கிறது.
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த், சிநேகா, லைலா, மோகன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தி கோட்’. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு யுவன் இசையமைத்துள்ளார். முதல் நாளில் உலகமெங்கும் மொத்த வசூலில் 126 கோடி ரூபாய் பெற்றுள்ளது.
இணையத்தில் படத்தின் நீளத்தை பலரும் குறையாக குறிப்பிட்டு வருகிறார்கள். படம் முடிந்து வரும் காட்சிகள் என அனைத்தையும் சேர்த்து 3 மணி நேரம் படமாக வெளியானது ‘தி கோட்’. இது திரையரங்க உரிமையாளர்களுக்கு பெரும் கடினமாக அமைந்தது. ஏனென்றால், அதிக காட்சிகளை திரையிட்டு வசூலை அள்ள முடியவில்லை.
இதனிடையே, படத்தின் நீளம் கருதி நீக்கப்பட்ட காட்சிகள் அனைத்தையும் ஓடிடியில் இணைக்க படக்குழு முடிவு செய்திருக்கிறது. ஓடிடியில் மூன்றரை மணி நேரம் ஓடக்கூடிய படமாக ‘தி கோட்’ இருக்கும் என்கிறது படக்குழு. இதில் படத்தில் விஜய் சென்றவுடன் சிவகார்த்திகேயன் - மோகன் இருவருக்கும் இடையே நடந்த உரையாடல் காட்சியும் அடங்கும் என்று தெரிவித்துள்ளார் வெங்கட்பிரபு. இதன்மூலம் ஓடிடி வெளியீட்டிலும் பார்வையாளர்கள் மீண்டுமொரு முறை பார்ப்பார்கள் என்று ‘தி கோட்’ படக்குழு கருதுகிறது.