சிவகார்த்திகேயன் காட்சியில் விஜய் ‘மாற்றிய’ வசனம்! - ‘தி கோட்’ சர்ப்ரைஸ்

By ஸ்டார்க்கர்

‘தி கோட்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்காக விஜய் செய்த சில விஷயங்கள் குறித்து இயக்குநர் வெங்கட்பிரபு பகிர்ந்துள்ளார்.

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த், சிநேகா, லைலா, மோகன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தி கோட்’. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு யுவன் இசையமைத்துள்ளார். இதில் விஜய்யுடன் ஒரு நடிகர் பட்டாளமே நடித்துள்ளது. இதன் இறுதிக் காட்சியில் சிவகார்த்திகேயன் சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

விஜய் - சிவகார்த்திகேயன் இருவருக்கும் இடையே உரையாடல்கள் இணையத்தில் பலராலும் விவாதிக்கப்பட்டது. தனக்கு பின்பு சிவகார்த்திகேயன் தான் என்று விஜய் இந்தக் காட்சியின் மூலம் சொல்லியிருக்கிறார் என பலரும் தெரிவித்தார்கள். இந்தக் காட்சியின்போது விஜய் செய்த வசனம் மாற்றம் குறித்து வெங்கட்பிரபு தெரிவித்துள்ளார். அதில், “விஜய் சார் செய்த காரியம் பெரிய விஷயம். சிவகார்த்திகேயனுக்கு விஜய் சாரை அவ்வளவு பிடிக்கும்.

“இதை வச்சிக்கோங்க சிவா. யாராவது வந்தால் சுட்ருவேன்னு மிரட்டுங்க. ஆனா, சுட்டுறாதீங்க” என்றுதான் விஜய் சார் சொல்ல வேண்டும் என்றேன். ஆனால், விஜய் சார்தான் “துப்பாக்கியை பிடிங்க சிவா. இனிமேல் எல்லாம் உங்க கையிலதான் இருக்கு” என்று சொன்னார். அதாவது ‘துப்பாக்கி’ அவருடைய படம். அதற்கு பின் வரும் வசனம் படத்தின் கதைக்குப் பொருத்தமாக இருந்தது.

அதற்கு சிவா “இதை விட பெரிய வேலை எதுக்கோ போறீங்க. இதை நான் பாத்துக்குறேன். அதை நீங்க பாருங்க” என்பார். சிவாவின் வசனத்துக்கு விஜய் சார் கையைக் காட்டிவிட்டு செல்வார். இது விஜய் சாருடைய பெருந்தன்மையைக் காட்டுகிறது. அதை வார்த்தைகளால் எப்படிச் சொல்வது என தெரியவில்லை” என்று வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE