வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ரஜினியின் ‘வேட்டையன்’ படக்குழு

By ஸ்டார்க்கர்

சென்னை: ரஜினியின் ‘வேட்டையன்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி குறித்து வெளியான வதந்திக்கு படக்குழு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

தா.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி, அமிதாப் பச்சன், ராணா, ஃபகத் பாசில், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வேட்டையன்’. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் படம் வரும் அக்டோபர் 10-ம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். இதனிடையே, நேற்று (செப்.6) முதல் ‘வேட்டையன்’ பணிகள் முடிவடையாத காரணத்தில் பட வெளியீட்டில் மாற்றம் இருக்கும் என தகவல் பரவியது.

இதனால் அதே தேதியில் ‘கங்குவா’ வெளியாக கூடிய சூழல் உருவானது. இந்த வதந்திகள் அனைத்தையும் பொய்யாக்கும் விதமாக, புதிய போஸ்டர் ஒன்றினை ‘வேட்டையன்’ படக்குழு வெளியிட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள இந்த போஸ்டரில் அக்டோபர் 10-ம் தேதி வெளியீடு என குறிப்பிட்டு வதந்திக்கு படக்குழு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. மேலும், அனிருத் இசையமைப்பில் ‘மனசிலாயோ’ என்ற முதல் பாடல் செப்டம்பர் 9-ம் தேதி வெளியாகும் எனவும் ‘வேட்டையன்’ படக்குழு தெரிவித்திருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடத்தில் ஒரே சமயத்தில் வெளியாக இருக்கிறது ‘வேட்டையன்’.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE