“ரஜினி மூத்தவர்... ‘கங்குவா’ ஒரு குழந்தை” - சூர்யா பேச்சு

By ஸ்டார்க்கர்

“ரஜினி மூத்தவர், ‘கங்குவா’ ஒரு குழந்தை” என்று தனது பேச்சில் குறிப்பிட்டு, ‘கங்குவா’ வெளியீடு ஒத்திவைக்கப்பட்டதை உறுதிப்படுத்தினார் சூர்யா.

சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கங்குவா’. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் பெரும் பொருட்செலவில் உருவாகி வருகிறது. அனைத்து மொழிகளிலும் வெளியாக இருப்பதால், கடந்த சில மாதங்களாக இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

அக்டோபர் 10-ம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்தது படக்குழு. ஆனால், அதே தேதியில் ரஜினி நடிக்கும் ‘வேட்டையன்’ படமும் வெளியாகும் என்று அறிவித்தார்கள். ஆகையால் இரண்டில் ஒரு படம் தான் வெளியாகும் என்ற சூழல் ஏற்பட்டது.

இதனிடையே, கார்த்தி நடித்துள்ள ‘மெய்யழகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா கோயம்புத்தூரில் நடைபெற்றது. இந்த விழாவில் ‘மெய்யழகன்’ தயாரிப்பாளரான சூர்யா பேசும் போது, ‘கங்குவா’ வெளியீடு குறித்தும் குறிப்பிட்டார்.

அதில் அவர், “தமிழ் சினிமாவுக்கு சிறப்பான படம் ஒன்றை கொடுத்துவிட வேண்டும் என்று இரண்டரை ஆண்டுகள், 1000 பேருக்கு மேல் வேலை செய்திருக்கிறோம். வெயில், மழை, மலை உச்சி, கடல், தண்ணீருக்குள் என போட்ட அவ்வளவு உழைப்பு வீண் போகாது என்ற நம்பிக்கை இருக்கிறது. அதற்கான அன்பும், மரியாதையும் நிச்சயம் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. அது வரும் போது வரட்டும் என்று தான் சொல்வேன்.

அக்டோபர் 10-ம் தேதி ‘வேட்டையன்’ படம் வெளியாகிறது. ரஜினி சார் மூத்தவர். நான் பிறக்கும் போது நடிக்க வந்தவர். கிட்டதட்ட 50 ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் அடையாளமாக இருப்பவர். அந்த மூத்தவரின் படம் வெளியாவது மட்டும் தான் சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.

’கங்குவா’ ஒரு குழந்தை. அந்தக் குழந்தை பிறக்கும் அன்றுதான் பிறந்த நாள். அந்த பிறந்தநாளை பண்டிகை ஆக்குவதற்கு ரசிகர்கள் என்னோடு இருப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. ’கங்குவா’ படக்குழுவினருக்காக அனைவரும் வேண்டிக் கொள்ளுங்கள். அந்தப் படம் வெளியாகும் நாள் முக்கியமான நாளாக இருக்கும்” என்று தனது பேச்சில் குறிப்பிட்டுள்ளார் சூர்யா.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE