சென்னை: பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘தங்கலான்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கியுள்ள திரைப்படம் ‘தங்கலான்’. இந்தப் படத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, டேனியல் கால்டாகிரோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கோலார் தங்க வயல் பின்னணியில் உருவான இந்த திரைப்படம் கடந்த நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஒடுக்கப்பட்ட மக்களின் யதார்த்த வாழ்வியலையும், ஆதிக்கத்திற்கு கட்டுப்பட்டு உரிமைகளுக்காக போராடிய அவர்களின் போராட்ட வாழ்வியலை மாய யதார்த்த திரை மொழியால் வெளிப்படுத்தியிருந்தது.
படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் முதல் நாளில் ரூ.26 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியது. இந்நிலையில் படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் செப்டம்பர் 6-ம் தேதி படம் இந்தி பேசும் வட மாநிலங்களில் வெளியாக உள்ளது. இதன் மூலம் வசூல் அதிகரிக்கலாம் எனத் தெரிகிறது.