சென்னை: நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதையடுத்து மலையாள சினிமா நடிகைகள் பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து பேசி வருகின்றனர். அதன் பேரில் போலீஸார் மலையாள நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அதையொட்டி நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளருமான விஷால் சில யோசனைகளை முன்வைத்துள்ளார். அவர் பேசியது என்ன என்பதை பார்ப்போம்.
“தமிழகத்தில் நடிகைகளுக்கு பாதுகாப்பான சூழல்தான் நிலவுகிறது. படப்பிடிப்புகளில் அந்தந்த தயாரிப்பு நிறுவனங்கள் பாதுகாப்பை உறுதி செய்து கொள்கின்றன. அதேபோல பவுன்சர்களையும் (பாதுகாவலர்கள்) தங்களது பாதுகாப்புக்காக திரை நட்சத்திரங்கள் வைத்துள்ளனர்.
இருந்தாலும் ஹேமா கமிட்டி போலவே நடிகர் சங்கம் சார்பில் 10 பேர் கொண்ட குழு அமைக்க திட்டமிட்டுள்ளோம். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். யார் தவறு செய்தாலும் நிச்சயம் தண்டனை கிடைக்கும். நடிகர் சங்கம் சார்பிலும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சினிமாவில் நடிக்க வாய்ப்புத் தருகிறேன் என்று சொல்லி பெண்களிடம் அத்துமீறும் நபர்களை செருப்பால் அடிக்க வேண்டும். குற்றம் செய்தவர் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். திரையுலகில் என்ன நடக்கிறது என்பதை கவனித்துக் கொண்டிருக்க நாங்கள் போலீஸ் கிடையாது. ஆனால், பாதிக்கப்பட்டவர்கள் எங்களிடம் புகார் கொடுத்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்” என விஷால் தெரிவித்தார்.