‘ராயன்’ வெற்றிக்காக தனுஷுக்கு காசோலை வழங்கி வாழ்த்திய கலாநிதி மாறன்!

By செய்திப்பிரிவு

சென்னை: ‘ராயன்’ திரைப்படம் வெற்றி பெற்றதாகக் கூறி, படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன், நடிகர் மற்றும் இயக்குநராக பணியாற்றிய தனுஷுக்கு 2 காசோலைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

தனுஷ் நடித்து இயக்கிய திரைப்படம் ‘ராயன்’. அவரது 50-ஆவது படமான இதனை சன் பிக்சர்ஸ் தயாரித்தது. இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார். படத்தில் எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி, பிரகாஷ் ராஜ், செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்தனர். கடந்த ஜூலை 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள அதீத வன்முறைக் காட்சிகள் விமர்சனத்துக்கு உள்ளானது. ரூ.70 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் ரூ.100 கோடி வசூலை நெருங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், படத்தின் இயக்குநர் மற்றும் நடிகரான தனுஷுக்கு, தயாரிப்பாளர் கலாநிதி மாறன் 2 காசோலை வழங்கி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது எக்ஸ் தள பக்கத்தில் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. மேலும், இப்படம் வெள்ளிக்கிழமை அமேசான் ஓடிடியில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE