‘தங்கலான்’ ரிலீஸுக்கு ரூ.1 கோடி டெபாசிட்: தயாரிப்பாளருக்கு ஐகோர்ட் உத்தரவு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘தங்கலான்’ படத்தை வெளியிடும் முன்பாக ரூ.1 கோடி டெபாசிட் செய்ய வேண்டும் என படத் தயாரிப்பாளரான ஞானவேல்ராஜாவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என பலர் தங்களது பணத்தை கொடுத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்தப் பணத்தை அவர் பலருக்கும் கடனாக கொடுத்துள்ளார். இதில் நிதி இழப்பு ஏற்பட்ட நிலையில், அவர் திவாலானவராக அறிவிக்கப்பட்டு இறந்து விட்டார். அவருடைய சொத்துகளை சென்னை உயர் நீதிமன்ற கட்டுப்பாட்டில் உள்ள சொத்தாட்சியர் நிர்வகித்து, அர்ஜூன்லால் சுந்தர்தாஸிடம் கடன் வாங்கியவர்களிடமிருந்து அந்த தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.

அதன்படி அர்ஜூன்லால் சுந்தர்தாஸிடமிருந்து ஸ்டுடியோ கிரீன் படத் தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரர்களான ஞானவேல்ராஜா மற்றும் ஈஸ்வரன் ஆகியோர் கடந்த 2013-ம் ஆண்டு ரூ. 10.35 கோடியை கடனாக வாங்கியிருந்தனர். இந்த தொகையை வட்டியுடன் திருப்பி செலுத்தக் கோரி சொத்தாட்சியர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், இதுவரை ஞானவேல்ராஜாவும், ஈஸ்வரனும் அந்தப் பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை.

இதையடுத்து ஸ்டுடியோ கிரீன் நிறுவனம், ஞானவேல்ராஜா, ஈஸ்வரன் ஆகியோரை திவாலானவர்களாக அறிவிக்கக் கோரி சொத்தாட்சியர், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ‘ரூ.10 கோடியே 35 லட்சம் கடன் தொகைக்கு, 2013-ம் ஆண்டு முதல் 18 சதவீத வட்டி, வழக்கறிஞர் கட்டணம் சேர்த்து ரூ.26.34 கோடியை அவர்கள் தர வேண்டும். இந்த தொகையை வழங்காததால் அவர்களை திவாலானவர்கள் என அறிவிக்க வேண்டும்’ எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை திங்கள்கிழமை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், சி.வி.கார்த்திகேயன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவில், “நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘தங்கலான்’ திரைப்படத்தை தயாரித்துள்ள ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் படத் தயாரிப்பாளர்கள், அந்தப் படத்தை வெளியிடும் முன்பாக, அதாவது வரும் ஆகஸ்ட் 14-ம் தேதிக்குள் ரூ.1 கோடியை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய வேண்டும். அதன்பிறகு அந்தப் படத்தை வெளியிடலாம்” என உத்தரவிட்டுள்ளனர்.

அதேபோல, ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் அடுத்த படமான நடிகர் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ படத்தை வெளியிடும் முன்பாக ரூ.1 கோடியை டெபாசிட் செய்ய வேண்டும் என்றும், இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து ஒப்புதல் பெற வேண்டும் என்றும் ஞானவேல்ராஜா உள்ளிட்டோருக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வரும் ஆகஸ்ட் 14-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE