உதகை படப்பிடிப்பில் நடிகர் சூர்யாவுக்கு காயம்: நலமுடன் இருப்பதாக தயாரிப்பாளர் தகவல்

By ஆர்.டி.சிவசங்கர்


சென்னை: கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘சூர்யா 44’ படத்தின் படப்பிடிப்பின்போது அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அவர் நலமுடன் இருப்பதாக தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “அன்பான ரசிகர்களே, சிறிய காயம் தான். தயவு செய்து யாரும் கவலைப்பட வேண்டாம். உங்கள் அனைவரின் அன்பு மற்றும் பிரார்த்தனையுடன் சூர்யா நன்றாக இருக்கிறார்” என தெரிவித்துள்ளார்.

‘கங்குவா’ படத்தைத் தொடர்ந்து நடிகர் சூர்யா, இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு ஜூலை 26-ம் தேதி முதல் உதகையில் நடைபெற்று வருகிறது. உதகையில் உள்ள ‘நவாநகர் பேலஸ்’ என்ற இடத்தில் சண்டை காட்சி படமாக்கப்பட்டு வந்தது. ‘ஜூனியர் பைட்டர்ஸ்’ உடன் சண்டை காட்சி நடந்த போது நடிகர் சூர்யாவுக்கு தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்தது. இதையடுத்து உடனடியாக படபிடிப்பு நிறுத்தப்பட்டது. படப்பிடிப்பு குழுவினர் நடிகர் சூர்யாவை ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.

லேசான காயம் என்பதால் சிறிது ஓய்வுக்கு பின்பு அவர் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்நிலையில், நடிகர் சூர்யாவின் மகனுக்கு இன்று பிறந்தநாள் என்பதால் நடிகர் சூர்யா அவரது பிறந்த நாளை கொண்டாட உதகையிலிருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்றார். இதனால், சூர்யாவின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சூர்யா மீண்டும் உதகை வந்து படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE