தனுஷுக்கு ஆதரவாக நடிகர் சங்கம்: அவசரமாக கூடும் தயாரிப்பாளர் சங்க செயற்குழு

By செய்திப்பிரிவு

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சமீபத்தில் நடத்திய கூட்டுக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், ஆக.16 முதல் புதிய படங்கள் தொடங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் நவ.1 முதல் தமிழ் சினிமாவின் அனைத்து விதமான படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட வேலைகளும் நிறுத்தப் படுவதாகவும் கூறப்பட்டு இருந்தது.

மேலும் நடிகர் தனுஷுக்கு எதிராகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. “தனுஷ், பல தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் பெற்றிருப்பதால் இனிவரும் காலங்களில் தயாரிப்பாளர்கள், தனுஷ் நடிக்கும் புதிய படங்களின் பணிகளை துவங்கும் முன் சங்கத்தை கலந்தாலோசிக்க வேண்டும்” என்று அந்த தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து, நவ.1 முதல் தமிழ் சினிமாவின் அனைத்து பணிகளையும் நிறுத்தப்போவதாக அறிவித்தது தன்னிச்சையான முடிவு என்று நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்தது. தனுஷ் குறித்த தீர்மானம் தொடர்பான தகவல் அதிர்ச்சியும், வருத்தமும் அளிப்பதாகவும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து தனுஷ் மீது எந்த புகாரும் அளிக்கப்படவில்லை என்றும் நடிகர் சங்கம் கூறியது. இது சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து தயாரிப்பாளர் சங்க செயற்குழு இன்று அவசரமாகக் கூடுகிறது. இதில் சினிமா ஸ்டிரைக், தனுஷ் விவகாரம், நடிகர் சங்கம் தெரிவித்த கண்டனம் உள்ளிட்ட விஷயங்கள் பேசப்படும் என்று தெரிகிறது.

தயாரிப்பாளர் சங்கத்தில் எடுக்கப்படும் முடிவை அடுத்து நடிகர் சங்கத்தின் செயற்குழுவும் கூட இருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE