ரூ.1.1 கோடியை 4 வாரத்தில் டெபாசிட் செய்ய ‘கோச்சடையான்’ பட தயாரிப்பாளருக்கு உத்தரவு 

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: காசோலை மோசடி வழக்கில் ரூ.1 கோடியே 1 லட்சத்தை 4 வார காலக்கெடுவில் அல்லிக்குளத்தில் உள்ள விசாரணை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய வேண்டுமென ‘கோச்சடையான்’ படத் தயாரிப்பாளருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அவருடைய மகள் சவுந்தர்யா இயக்கத்தில் ‘கோச்சடையான்’ என்ற அனிமேஷன் திரைப்படம் கடந்த 2014-ல் வெளியானது. இப்படத்தை மீடியா ஒன் க்ளோபல் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. படத்தயாரிப்பு பணிகளுக்காக ஆட் பியூரோ அட்வர்டைசிங் என்ற நிறுவனத்திடமிருந்து ரூ.10 கோடியை மீடியா ஒன் நிறுவனம் கடனாக வாங்கியிருந்தது. மேலும் இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையுடன், தமிழகத்தில் வசூலாகும் தொகையில் 20 சதவீதத்தை ஆட்பீரோ நிறுவனத்துக்கு வழங்குவதாகவும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால், இந்த ஒப்பந்தத்தை மீறி விட்டதாகவும், வாங்கிய கடனுக்காக வழங்கப்பட்ட ரூ.5 கோடிக்கான காசோலையை வங்கியில் செலுத்திய போது அதை நிறுத்தி வைக்கும்படி வங்கிக்கு கடிதம் அனுப்பியதாகவும் கூறி மீடியா ஒன் க்ளோபல் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் மற்றும் அதன் இயக்குநரான முரளி மனோகர் ஆகியோர் மீது ஆட் பியூரோ அட்வர்டைசிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான அபிர்சந்த் நஹர், சென்னை அல்லிக்குளம் நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கை விசாரித்த அல்லிகுளம் நீதிமன்றம், படத் தயாரிப்பாளரான முரளி மனோகருக்கு 6 மாத சிறை தண்டனை விதித்தது. மேலும் ரூ.7 கோடியே 70 லட்சத்தை இழப்பீடாக அபிர்சந்த் நஹாருக்கு வழங்கும்படி, முரளி மனோகருக்கு உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை சென்னை அமர்வு நீதிமன்றம் உறுதி செய்த நிலையில், அந்த தீர்ப்பை எதிர்த்து முரளி மனோகர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், முரளி மனோகருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இந்நிலையில், காசோலை மோசடி வழக்குகளில் கீழமை நீதிமன்றங்கள் விதிக்கும் இழப்பீட்டுத் தொகையில் 50 சதவீத தொகையை செலுத்தும்படி நிபந்தனை விதித்துதான் தண்டனை நிறுத்தி வைக்கப்படும் எனவும், இந்த வழக்கில் எந்த நிபந்தனையும் விதிக்கப்படாமல், முரளி மனோகரின் தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதால், அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி அபிர்சந்த் நஹார் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி, ஏற்கெனவே ரூ.8 கோடியே 99 லட்சத்தை திருப்பிக் கொடுத்து விட்டதாக முரளி மனோகர் தரப்பில் கூறப்படுவதால், மீதியுள்ள கடன் தொகையான ரூ.1 கோடியே 1 லட்சத்தை நான்கு வாரங்களில், அல்லி குளத்தில் உள்ள விசாரணை நீதிமன்றத்தில் இந்த வழக்கு எண்ணை குறிப்பிட்டு டெபாசிட் செய்ய வேண்டும் என முரளி மனோகர் தரப்புக்கு உத்தரவிட்டுள்ளார். நான்கு வாரங்களில் இந்த தொகையை செலுத்தாவிட்டால், தண்டனையை நிறுத்தி வைத்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தானாக ரத்தாகி விடும் என்றும், சிறை தண்டனை தொடர்பாக விசாரணை நீதிமன்றம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் எனவும் நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்,

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE