வயநாடு பேரிடர் நிவாரணத்துக்கு நடிகர் விக்ரம் ரூ.20 லட்சம் நிதி! 

By செய்திப்பிரிவு

சென்னை: வயநாடு நிலச்சரிவு நிவாரண பணிகளுக்காக கேரள முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு நடிகர் விக்ரம் ரூ.20 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவினால் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலரை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இரண்டாம் நாளாக இன்று (புதன்கிழமை) மீட்பு பணிகள் தொடர்கின்றன. நிவாரண நிதியாக தமிழக அரசு, கேரளாவுக்கு ரூ.5 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது. இந்நிலையில், வயநாடு நிலச்சரிவு நிவாரண பணிகளுக்காக கேரள முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு நடிகர் விக்ரம் ரூ.20 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். முன்னதாக, கடந்த 2018-ம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போது, நடிகர் விக்ரம் ரூ.35 லட்சம் நிதியுதவி வழங்கி உதவியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில், வயநாடு நிலச்சரிவு துயர் குறித்து கவலை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “வயநாடு துயரம், இயற்கை பேரிடர் எனும் போதிலும் என் சகோதர சகோதரிகளின் உயிரிழப்பை கண்டு தாங்க முடியாத மனவேதனையில் செய்வதறியாது தவிக்கிறேன். இந்த நெருக்கடியான சூழ்நிலையில் அரசுத்துறையை சார்ந்த பணியாளர்கள், தனியார் தொண்டு நிறுவனங்களின் மனிதநேய உள்ளங்கள் செய்து வரும் அளப்பரிய களப்பணிக்கு அனைவரும் நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம். கேரளம் மீண்டு வர துணைநிற்போம்” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE