நிஜ சிங்கங்களுடன் பிரபு சாலமன் இயக்கும் ‘மாம்போ’

By செய்திப்பிரிவு

நிஜ சிங்கங்களுடன் பிரபு சாலமன் இயக்கும் மாம்போ. பிரபு சாலமன் இயக்கும் அடுத்த படத்துக்கு ‘மாம்போ’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இதில் நடிகர் விஜயகுமாரின் பேரனும் நடிகர் ஆகாஷின் மகனுமான விஜய் ஸ்ரீ ஹரி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ரோஜா கம்பைன்ஸ் காஜா மைதீன், 18 வருடங்களுக்கு பிறகு இந்தப்படத்தைத் தயாரிக்கிறார். டி.இமான் இசையமைக்கிறார். இது சிறுவனுக்கும் சிங்கத்துக்கும் இடையேயான உறவை விவரிக்கும் விதமாக உருவாகும் படம். இதற்காக நிஜ சிங்கத்தை வைத்து படமாக்கியுள்ளனர். இப்படி உருவாகும் முதல் ஆசிய படம் இது.

இந்தப் படத்தின் அறிமுக விழா சென்னையில் நடந்தது. இசை அமைப்பாளர் டி.இமான், பின்னணி இசைக் கோர்வையை தனது இசைக் குழுவுடன் நேரலையாக வாசித்தார். பின்னர் முதல் தோற்றம் வெளியிடப்பட்டது.

பிரபு சாலமன் பேசும்போது, “உலகத் தரத்தில் குழந்தைகளுக்காக படம் எடுக்க வேண்டும் என்று விரும்பினேன். அப்படியான படம்தான் இது” என்றார். நடிகர் விஜயகுமார் பேசும்போது, “விஜய் ஸ்ரீஹரி வாழ்க்கையில் தன்னைத்தானே ஒவ்வொரு கட்டமாக மெருகேற்றினார். ரஜினிகாந்த்தை சந்தித்து, அவரது ஆலோசனை பெற்றோம். பிறகு அவரது அப்பா, நடிகர் ஆகாஷ் ஆசைக்கிணங்க பிரபு சாலமன் இயக்கத்தில், கதாநாயகனாக அறிமுகப்படுத்தலாம் என்று முடிவு எடுத்தோம். தயாரிப்பாளர் காஜா மைதீன் ஒத்துழைப்புடன் இந்தப் படம் பெரிய படமாக வந்துள்ளது. அனைவரது ஆசியிலும் இத்திரைப்படம் பெரிய வெற்றியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.”என்றார்.

தயாரிப்பாளர்கள் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா, தனஞ்செயன், இயக்குநர்கள் கே.எஸ்.அதியமான், கிருஷ்ணா, சித்ரா லட்சுமணன், ‘டாடா' இயக்குநர் கணேஷ்.கே.பாபு, ‘குட் நைட்' இயக்குநர் விநாயக்சந்திரசேகர் உட்பட பலர் கலந்துகொண்டு பேசினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE