“முடிந்தால் என்னை தடுத்துப் பாருங்கள்” - தயாரிப்பாளர் சங்கத்துக்கு விஷால் சவால்

By செய்திப்பிரிவு

சென்னை: “விஷால் தொடர்ந்து படங்களில் நடிப்பார். தயாரிப்பாளர்கள் என சொல்லிக்கொள்பவர்களே... முடிந்தால் என்னை தடுத்து நிறுத்துங்கள்” என்று தயாரிப்பாளர் சங்கத்துக்கு நடிகர் விஷால் சவால் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இது உங்கள் குழுவில் உள்ள கதிரேசனை உள்ளடக்கிய கூட்டு முடிவு என்பதும், அந்த நிதியானது தயாரிப்பாளர் சங்கத்தின் நலிந்த, மூத்த உறுப்பினர்களின் மருத்துவ காப்பீடு, நலப்பணிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கான கல்வி உள்ளிட்ட நலன்களுக்காக பயன்படுத்தப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியாதா?

திரையுலகில் நிறைய வேலை உள்ளது. அதில் முறையான கவனத்தை செலுத்துங்கள். இரட்டை வரி விதிப்பு, தியேட்டர் பராமரிப்பு கட்டணம் என பல விஷயங்கள் தீர்க்கப்பட வேண்டும். விஷால் தொடர்ந்து படங்களில் நடிப்பார். இதற்கு முன் திரைப்படங்களை தயாரிக்காத, எதிர்காலத்திலும் தயாரிக்காமல் வெறும் ‘தயாரிப்பாளர்கள்’ என சொல்லிக் கொள்பவர்களே... முடிந்தால் என்னை தடுத்து நிறுத்துங்கள். ஆரோக்கியமான விஷயங்களைப் பற்றி யோசியுங்கள்” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, “நடிகர் விஷாலை வைத்து தயாரிக்கும் புதிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தை கலந்தாலோசித்து, அதன் பின்னர் தங்களது பணிகளை துவங்க வேண்டும்” என தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நிபந்தனை விதித்தது குறிப்பிடத்தக்கது. அதனை வாசிக்க: விஷால் படங்களைத் தயாரிப்போருக்கு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் நிபந்தனை

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE