அதர்வா - நிமிஷா சஜயனின் ‘டிஎன்ஏ’ படப்பிடிப்பு நிறைவு

By செய்திப்பிரிவு

சென்னை: அதர்வா, நிமிஷா சஜயனின் ‘டிஎன்ஏ’ படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

‘ஒரு நாள் கூத்து', ‘மான்ஸ்டர்', ‘ஃபர்ஹானா' படங்களை இயக்கியவர் நெல்சன் வெங்கடேசன். இவர் அடுத்து இயக்கும் படம், 'டிஎன்ஏ'. அதர்வா முரளி நாயகனாக நடித்துள்ளார். நிமிஷா சஜயன், பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒலிம்பியா மூவீஸ் சார்பில் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிக்கிறார். பார்த்திபன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இப்போது டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளன. இதன் கதை, மெடிக்கல் கிரைம் த்ரில்லர் பின்னணியில் உருவாகி இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் படம் பற்றி பேசுகையில், “டிஎன்ஏ' படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. அதர்வா முரளி இந்தப் படம் முடியும் வரை எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார். என் கரியரின் ஆரம்ப காலத்தில் அதர்வாவின் படங்களில் அவரது நடிப்பைப் பார்த்து வியந்திருக்கிறேன்.

அவர் என் கதையைக் கேட்காமலேயே நடிக்க ஒத்துக் கொண்டது மகிழ்ச்சி. 'டிஎன்ஏ' திரைப்படம் அவரது கரியரில் நிச்சயம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். அனைத்து நடிகர்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

இந்த படத்தில் நிமிஷா சஜயன் திறமையாக நடித்துள்ளார். இது பலருக்கும் சவாலான கதாபாத்திரமாக இருக்கும். ஆனால், நிமிஷா அதைத் திறமையாகக் கையாண்டுள்ளார். படத்தைப் பார்வையாளர்களுக்காக திரையில் கொண்டு வர ஆர்வமாக இருக்கிறோம்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE