“இந்தி திணிப்பு மட்டும் அல்ல…” - ‘ரகு தாத்தா’ குறித்து கீர்த்தி சுரேஷ் பகிர்வு

By செய்திப்பிரிவு

சென்னை: “இந்தப் படம் ‘இந்தி திணிப்பு’ பற்றியது என்பதை புரிந்து கொண்டிருப்பீர்கள். இருப்பினும் படம் பெண்கள் மீதான திணிப்பு உள்ளிட்ட எல்லாவிதமான ‘திணிப்பு’கள் குறித்தும் பேசும்” என ‘ரகு தாத்தா’ படம் நடிகை கீர்த்தி சுரேஷ் குறித்து பேசியுள்ளார்.

கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய நடிகை கீர்த்தி சுரேஷ், “இந்தக் கதையை இயக்குநர் சொல்லும்போதே எனக்கு பிடித்துவிட்டது. இதில் என்னுடைய கதாபாத்திரத்தை எப்படி கையாள போகிறோம் என்ற சந்தேகம் இருந்தது. இயக்குநர் துணையாக இருந்தார். நீண்ட நாட்களாக நான் காத்திருக்கும் ஆல்பம் இது. எனக்கு மிகவும் பிடித்த இந்தப் படத்தின் பாடல்களை மக்கள் கேட்க வேண்டும் என ஆவலாக இருந்தேன். ஷான் ரோல்டனுக்கு நன்றி. படக்குழுவில் பெண்கள் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

இந்தப் படம் ஒரு காமெடி டிராமா. டீசரில் நீங்கள் பார்க்கும்போது படம் ‘இந்தி திணிப்பு’ பற்றியது என்பதை புரிந்து கொண்டிருப்பீர்கள். இருப்பினும் படம் மொத்தமாக ‘திணிப்பு’ குறித்து பேசுகிறது. பெண்கள் மீதான திணிப்பு உள்ளிட்ட அனைத்து விதமான திணிப்புகள் குறித்தும் படம் பேசும். இது ஒரு சிறிய மெசேஜ் சொல்லும் படம். ஆனால் பிரச்சாரமாக இருக்காது. இதில் அரசியல் சர்ச்சைகள் எதுவும் இருக்காது. சிரித்து மகிழக்கூடிய படமாக இருக்கும்” என்றார் கீர்த்தி சுரேஷ்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE