பா.ரஞ்சித் - விக்ரமின் ‘தங்கலான்’ ஆகஸ்ட் 15-ல் ரிலீஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘தங்கலான்’ திரைப்படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘பொன்னியின் செல்வன்’ படத்தைத் தவிர்த்து நடிகர் விக்ரமுக்கு சொல்லிக்கொள்ளும்படியான வெற்றி அமையவில்லை. இந்தச் சூழலில்தான் விக்ரம் - பா.ரஞ்சித் இணையும் ‘தங்கலான்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பா.ரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது’ எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்த இரண்டு கலைஞர்களின் இணைவில் உருவாகும் இப்படம், கோலார் தங்க வயல் பின்னணியில் பீரியட் டிராமா படமாக உருவாகியுள்ளது.

இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. ஞானவேல் ராஜா படத்தை தயாரித்துள்ளார். கடந்த 17-ம் தேதி வெளியான ‘மினிக்கி மினிக்கி’ முதல் சிங்கிள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. படம் ஜனவரி மாதமே வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், படம் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE