‘சர்தார் 2’ படப்பிடிப்பில் உயிரிழந்த ஸ்டன்ட் கலைஞர் உடலுக்கு நடிகர் கார்த்தி அஞ்சலி

By செய்திப்பிரிவு

சென்னை: ‘சார்தார் 2’ படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த சண்டை பயிற்சியாளர் ஏழுமலை உடலுக்கு நடிகர் கார்த்தி அஞ்சலி செலுத்தினார். மேலும், அவரது குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார்.

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்த ‘சர்தார்’ படத்தின் முதல் பாகம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தின் பணிகள் அண்மையில் தொடங்கின. சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் புதன்கிழமை நடைபெற்ற படப்பிடிப்பில் சண்டைக் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக 20 அடி உயரத்தில் இருந்து சண்டைப் பயிற்சியாளரான ஏழுமலை என்பவர் தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு மார்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் பலத்த அடிப்பட்டது.

உடனடியாக படக்குழுவினர் அருகிலிருந்த தனியார் மருத்துவமனை ஒன்றில் ஏழுமலையை அனுமதித்தனர். அவரை பரிசோதித்து தீவிர சிகிச்சை அளித்த மருத்துவர்கள் நுரையீரலில் ரத்தக் கசிவு ஏற்பட்டதால் ஏழுமலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதனையடுத்து ஏழுமலை உயிரிழப்புக்கு படக்குழு இரங்கல் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், சென்னை திருவொற்றியூர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஏழுமலையின் உடலுக்கு நடிகர் கார்த்தி வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தினார். மேலும், குடும்பத்தினருக்கு அவர் ஆறுதல் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE