பிறந்த நாளை முன்னிட்டு ரத்த தானம் செய்தார் நடிகர் சூர்யா!

By செய்திப்பிரிவு

சென்னை: “ரசிகர்களை போல ஒவ்வொரு ஆண்டும் இனி நானும் ரத்த தானம் செய்வேன்” என கடந்த ஆண்டு நடிகர் சூர்யா உறுதியளித்திருந்தார். அதன்படி இன்று அவர் ரத்த தானம் செய்தார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா ‘கங்குவா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் வரும் அக்டோபர் 10-ம் தேதி வெளியாகிறது. ரஜினியின் ‘வேட்டையன்’ படத்துடன் மோதுகிறது. சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு வரும் 23-ம் தேதி படத்தின் புதிய போஸ்டர் அல்லது ட்ரெய்லர் அறிவிப்பு வெளியாகலாம் என தெரிகிறது.

இந்நிலையில், சூர்யா நற்பணி மன்றம் சார்பில், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், ஞாயிற்றுக்கிழமை 400-க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர். பல மாவட்டங்களில் ரசிகர் மன்றம் சார்பில் ரத்த தானம் செய்யவும் ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும் சூர்யாவின் பிறந்த நாள் மட்டுமின்றி, எப்போது எங்கு தேவைப்பட்டாலும், ரத்த தானம் அளிக்கும் ஒரு அமைப்பையும் ரசிகர்கள் மேற்கொண்டுள்ளனர்.

கடந்த ஆண்டு 2000-க்கும் மேற்பட்டோர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு ரத்த தானம் செய்தனர். அவர்களை நேரில் அழைத்து விருந்தளித்து பாராட்டிய நடிகர் சூர்யா, இனி ஒவ்வொரு ஆண்டும் தானும் ரத்த தானம் செய்ய உள்ளதாக தெரிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் நேற்று ரசிகர்கள் ரத்த தானம் செய்த நிலையில், இன்று அவர் ரத்த தானம் செய்துள்ளார். ‘கங்குவா’ படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் சூர்யா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE