தொகுப்பாளர் விஜய் ஆதிராஜ் இயக்கும் ‘நொடிக்கு நொடி’ - படப்பிடிப்பு தொடக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: பிரபல தொகுப்பாளர் விஜய் ஆதிராஜ் இயக்கும் 'நொடிக்கு நொடி' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

நாக்ஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் அஷ்வின் குமார், ஷியாம், நரேன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகும் படம் 'நொடிக்கு நொடி'. இதனை 90களில் பிரபல டிவி தொகுப்பாளராகவும், நடிகராவும் இருந்த விஜய் ஆதிராஜ் இயக்குகிறார். இவர் ஏற்கெனவே ‘புத்தகம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இதில் ‘குக் வித் கோமாளி’ மூலம் பிரபலமான அஸ்வின் குமார் ஹீரோவாக நடிக்கிறார். இவர் இதற்கு முன்பு ‘என்ன சொல்லப் போகிறாய்’, ‘செம்பி’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். ஷ்யாம், நரேன் உள்ளிட்டோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படம் குறித்து விஜய் ஆதிராஜ் கூறும்போது, “விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்ற எனது கனவு 'நொடிக்கு நொடி' மூலம் நனவாகிறது. இந்த படத்தில் முன்னணி நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இதில் பல ஆச்சரியங்கள் உள்ளன. ஒன்றன்பின் ஒன்றாக அவை வெளியாகும் போது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் என்று நம்புகிறேன்" என்றார்.

நம்ரிதா, அபிராமி வெங்கடாச்சலம் மற்றும் மேகா ராஜன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். அம்ரேஷ் இசையமைக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE