புதுச்சேரி: புதுவையில் ‘இந்தியன் 2’ படத்தை வரவேற்று திரையங்கு முன்பு 5 கிலோ கற்பூரத்தை ரசிகர்கள் ஏற்றினர். இதையடுத்து, தீ கொளுந்து விட்டு எரிந்ததால் போலீஸார் போராடி அணைத்தனர். இதையடுத்து, கற்பூரம் ஏற்றியவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று எச்சரித்தனர்.
நடிகர் கமல் நடித்து, இயக்குநர் சங்கர் இயக்கிய ‘இந்தியன் 2’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. புதுவை நகர பகுதியில் அனைத்து திரையரங்குகளிலும் இன்று இத்திரைப்படம் வெளியிடப்பட்டது. ரசிகர்கள் தியேட்டர்கள் முன்பு வைத்திருந்த கமல் கட் - அவுட், பேனர்களுக்கு பாலபிஷேகம் செய்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். புதுவை அண்ணாசாலையில் உள்ள ரத்னா தியேட்டர் வாசலில் ரசிகர்கள் 5 கிலோ கற்பூரத்தை ஒரு இரும்பு ஸ்டாண்டில் வைத்து எரித்தனர். இதனால் தீ மளமளவென பற்றி எரிந்தது.
கற்பூரத்தில் பற்றி எரிந்த தீ அருகிலிருந்த சினிமா பேனரிலும் பற்றும் நிலை ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. பாதுகாப்பு பணியிலிருந்த ஓதியஞ்சாலை போலீஸாரும் ரசிகர்களும் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. இதைத் தொடர்ந்து இரும்பு ஸ்டாண்டை கீழே தள்ளி பின்னர் தீயை அணைத்தனர். மேலும், கற்பூரம் ஏற்றியவரை காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீஸார், அவரை கடுமையாக எச்சரித்து அனுப்பினர்.