சென்னை: "இரண்டு படங்கள் முடிந்துவிட்டன. விரைவில் அவை ரிலீஸ் ஆகிவிடும். அடுத்து ‘சர்தார் 2’ துவங்க இருக்கிறது. அடுத்த வருடம் லோகேஷுடன் மீண்டும் பிரியாணி பக்கெட்டை எடுக்க வேண்டும்” என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.
கடந்த மே 25-ஆம் தேதி நடிகர் கார்த்தி தனது 47-வது பிறந்தநாளை கொண்டாடினார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுக்க ரத்த தான முகாம்கள் நடைபெற்றது. சென்னை தியாகராய நகரில் ரத்த தானம் செய்தவர்களுக்கு நடிகர் கார்த்தி சான்றிதழ் வழங்கி விருந்தளித்தார். இந்நிகழ்வில் கார்த்தி பேசுகையில், “நான் மருத்துவர்களுடன் குழுவில் இருக்கிறேன். அவர்கள் ரத்தம் இல்லை என்று கூறுவதை கேட்டிருக்கிறேன். முக்கியமாக அரசு மருத்துவமனைக்கு பெரிய அளவில் யாரும் ரத்தம் கொடுப்பதில்லை. அவரவர் தங்களின் உறவினர்களுக்கு கொடுத்துக் கொள்வார்கள்.
யாரென்றே தெரியாதவர்களுக்கு ரத்தம் கொடுத்துள்ளீர்கள். அது சாதாரண விஷயமே கிடையாது. அதற்கு உங்கள் அனைவருக்கும் நன்றி. அதுவும் அரசு மருத்துவமனையில் செய்ததற்கு நன்றி” என்றார். தொடர்ந்து, “இரண்டு படங்கள் முடிந்துவிட்டன, விரைவில் அவை ரிலீஸ் ஆகிவிடும். அடுத்து சர்தார் 2 துவங்க இருக்கிறது. அடுத்த வருடம் லோகேஷ் கனகராஜுடன் மீண்டும் பிரியாணி பக்கெட்டை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.