ஆர்யா தயாரிப்பில் சந்தானம் நடிக்கும் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ அடுத்த பாகத்துக்கான பணிகள் தொடக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: சந்தானம் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படத்தின் அடுத்த பாகம் உருவாக உள்ளது. இந்தப் படத்தினை நடிகர் ஆர்யா தயாரிக்கிறார். இதற்கான படப்பணிகள் பூஜையுடன் தொடங்கியுள்ளன.

இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’. இந்தப் படத்தில் சுர்பி, பெப்சி விஜயன், ரெடின் கிங்ஸ்லீ, லொள்ளு சபா மாறன், சாய் தீனா, மொட்ட ராஜேந்திரன், முனிஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹாரர் - காமெடி படமாக உருவான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதன் எதிரொலியாக படம் ரூ.40 கோடிக்கும் அதிமான வசூலை ஈட்டியது.

இந்நிலையில், இப்படத்தின் அடுத்த பாகம் தற்போது உருவாக உள்ளது. நிஹாரிகா என்டர்டெயின்மென்ட், தி ஷோ பீப்பிள், ஹேன்ட்மேட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ஆர்யா வழங்க சந்தானம் நடிக்கிறார். முதல் பாகத்தை இயக்கிய பிரேம் ஆனந்த் இந்தப் படத்தையும் இயக்குகிறார். இதற்கான படப்பணிகள் சென்னையில் பூஜையுடன் தொடங்கியுள்ளன.

படம் குறித்து பேசிய இயக்குநர் பிரேம் ஆனந்த், “கடந்த வருடம் ஜூலை மாதம் வெளியான ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. அதன் அடுத்த பாகத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளை கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து செய்து சமீபத்தில் முடித்துள்ளோம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சிரித்து, ரசித்து மகிழும் திரைப்படமாக இதுவும் இருக்கும்.

மிக அதிக பொருட்செலவில் உருவாக உள்ள இத்திரைப்படத்தின் கதை ஒரு சொகுசு கப்பலில் தொடங்கி தீவு ஒன்றில் நடைபெறும் வகையில் அமைந்துள்ளது. இதற்காக பிரம்மாண்ட பட்ஜெட்டில் அரங்கங்களை அமைக்க உள்ளோம். ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தை விட அதிக குதூகலத்தையும் உற்சாகத்தையும் ரசிகர்களுக்கு இப்படம் வழங்கும்” என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE