நடிகர் யோகிபாபு காமெடி, குணச்சித்திர வேடங்கள் மட்டுமின்றி கதையின் நாயகனாகவும் சில படங்களில் நடித்து வருகிறார். அதன்படி அவர் கதையின் நாயகனாக நடிக்கும் படத்துக்கு ‘கான்ஸ்டபிள் நந்தன்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதை அறிமுக இயக்குநர் பூபால நடேசன் எழுதி இயக்குகிறார். சங்கர் புரொடக் ஷன்ஸ் சார்பாக டி.சங்கர் திருவண்ணாமலை தயாரிக்கிறார்.
படம் பற்றி பூபால நடேசனிடம் கேட்டபோது, “இது உணர்ச்சிகரமான கதையை கொண்ட படம். காமெடியும் இருக்கும். யோகிபாபு, கருணையின் உச்சமான கான்ஸ்டபிளாக நடிக்கிறார். அதே நேரம் மிருகத்தனத்தின் உச்சமாக ரவிமரியா நடிக்கிறார்.
காவல்துறையில் அதிக கருணையுடன் ஒருவர் இருந்தால் என்ன நடக்கும் என்பதுதான் படம். சென்னையில் கதை நடக்கிறது. மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது” என்றார்.