சென்னை: “என்னுடைய தாய் கரீமா பேகம், நான் பெற்ற சர்வதேச விருதுகளை துண்டு ஒன்றினால் சுற்றி வைத்திருப்பார். காரணம், அது தங்கத்தால் ஆனது என்று அவர் நினைத்திருந்தார்” என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், “நான் என்னுடைய சர்வதேச விருதுகளை துபாயில் வைத்திருக்கிறேன். அந்த விருதுகள் தங்கத்தால் ஆனவை என்று நினைத்து, என்னுடைய அம்மா அதனை துணியால் சுற்றி வைத்திருப்பார். அவர் மறைவுக்குப் பிறகு, அவரின் அறைக்குச் சென்று, அங்கிருந்த விருதுகளை துபாய் ஃபிர்தௌஸ் ஸ்டுடியோஸுக்கு மாற்றிவிட்டேன்.
மேலும், சில விருதுகள் என் கைக்கு கிடைக்கவில்லை. காரணம், படத்தின் இயக்குநர்கள் என்னுடைய நினைவுப் பரிசாக அதனை வைத்துக் கொண்டார்கள். நான் ‘விருது’களுக்கான கட்டத்தைத் தாண்டி விட்டேன் என நினைக்கிறேன். அது ஒரு பகுதியாக இருந்தது. நான் புதியதை நோக்கி நகர்கிறேன்” என்றார்.
ஏ.ஆர்.ரஹ்மான் 2 ஆஸ்கர் விருதுகளையும், 2 கிராமி விருதுகளையும், பாஃப்தா, கோல்டன் குளோப், 6 தேசிய விருதுகள், 32 ஃபிலிம்ஃபேர் விருதுகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
» இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்குடன் நடிகை மனிஷா கொய்ராலா சந்திப்பு
» “சில வாய்ப்புகள் கைமாறி சென்றிருக்கின்றன” - காஜல் அகர்வால் பகிர்வு