சென்னை: “திருமணமானவர், குழந்தை உடையவர் அவரால் முழு அர்பணிப்புடன் பணியாற்ற முடியாது என்று கூறி, சில வாய்ப்புகள் மற்றவர்களின் கைகளுக்கு மாறியிருக்கின்றன. இந்த சார்பு நிலை தற்போது திரையுலகில் மெதுவாக மாற்றம் கண்டு வருகிறது” என நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.
அண்மையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “ஒரு பெண் மனைவியாகவும், தாயாகவும் இருந்தாலும் கூட, அது அவரின் தொழிலை பாதித்துவிடக் கூடாது. அவர் திருமணமானவர், அதனால் இந்தப் படத்துக்கு வேறொருவரைத் தேர்வு செய்துவிடலாம் என பல குரல்களை நான் கேட்டிருக்கிறேன். அதைக் கடந்தும் வந்துவிட்டேன். ஆனால் அந்தக் குரல்கள் தற்போது குறைந்துவிட்டதாக நினைக்கிறேன்.
நான் மனைவி, தாய் என்ற பொறுப்புகளை கொண்டிருக்கும்போதிலும், அது என்னுடைய அர்ப்பணிப்பையும், எனர்ஜியையும், தொழிலையும் பாதிக்கவில்லை. சில சமயங்களில் திருமணமானவர், குழந்தை உடையவர் அவரால் முழு அர்பணிப்புடன் பணியாற்ற முடியாது என்று கூறி, சில கதாபாத்திரங்கள் மற்றவர்களின் கைகளுக்கு மாறியிருக்கிறது. இந்த சார்பு நிலை தற்போது திரையுலகில் மெதுவாக மாற்றம் கண்டு வருகிறது. அத்தகைய பெண்கள் திரையுலகில் தங்களின் திறமைகளை நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள்.
என்னுடைய குடும்பத்தின் ஆதரவு முக்கியமானது. என் குடும்பத்தை பொறுத்தவரை அவர்கள் எதிலும் தலையிடாமல், என்னை ஊக்கப்படுத்துவதால், எனக்கான நம்பிக்கை அதிகரித்துள்ளளது. அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார். காஜல் அகர்வால் நடிப்பில் அடுத்ததாக ‘சத்யபாமா’ திரைப்படம் மே 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.