சென்னை: சென்னையின் பிரபல இரைப்பை மற்றும் குடலியல் மருத்துவரும் ரோபாட்டிக் அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் யு.பி.சீனிவாசன்உருவாக்கியுள்ள ‘ஜண்டமட்டான்’எனும் இசை ஆல்பத்தைசரிகம நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன் வெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் சிம்புதேவன், மந்திரமூர்த்தி, வி.இசட்.துரை, பாடகர் மனோ, தயாரிப்பாளர் பி.எல். தேனப்பன், ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஸ்வரன் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய டாக்டர் சீனிவாசன், “நான் எழுதிய சிறுகதை இப்படிகுறும்படமாக, ஆல்பமாக உருவாகும் என எதிர்பார்க்கவில்லை. சிறுவயதில் என் பாட்டி சொன்ன கதையின் விரிவாக்கம்தான் இந்தப் பாடல். நண்பர்களின் உதவியோடு இதை தயாரித்துள்ளேன். பாடல் வரிகளில் சமூக கருத்துகளையும் இணைத்து அமைத்துள்ளோம்” என்றார்.
பாடகர் மனோ பேசும்போது, “ டாக்டர்கள் என்றால் அதிகம் பிடிக்கும். அவர்கள் மீது மரியாதையும் உண்டு. நான்10-ம் வகுப்புத் தேர்வை 5 முறை எழுதியிருக்கிறேன். அதனால் மருத்துவப் படிப்பு எவ்வளவு கஷ்டம் என்று தெரியும். டாக்டர் சீனிவாசன் இந்த ஆல்பத்தை எழுதி உருவாக்கி இருக்கிறார். வாழ்த்துகள். எனக்கு ஹாரர் படங்கள் பார்க்க பயமாக இருக்கும். ‘இதயத்தை திருடாதே’ படத்தில் வரும் ‘காட்டுக்குள்ளே பாட்டுச் சொல்லும்’ பாடலை இளையராஜா இசையில் பாடும்போது கூட, அருகில் ஒருவரை வைத்துக்கொண்டே பாடினேன். ஆனால், இங்கு ஒளிபரப்பப்பட்ட ‘ஜண்டமட்டான்’ பாடலை உங்கள் முன் தைரியமாகப் பார்த்தேன்” என்றார்.