சென்னை: ஹிப் ஹாப் தமிழா ஆதி, நாயகனாக நடித்துள்ள படம், ‘பிடி சார்’. காஷ்மிரா பர்தேசி, அனிகா, கே.பாக்யராஜ், பிரபு, தியாகராஜன், பாண்டியராஜன், மதுவந்தி, தேவதர்ஷினி என பலர் நடித்துள்ளனர். கார்த்திக் வேணுகோபாலன் இயக்கியுள்ள இந்தப் படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரித்துள்ளார். வரும் 24-ம் தேதி வெளியாகிறது.
இந்தப் படம்பற்றி, ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி கூறும்போது, “ பள்ளியின் விளையாட்டு விஷயங்களைப் பார்த்துக்கொள்பவர்தான் பிடி சார். அதைத் தாண்டி மாணவர்களின் ஒழுக்கத்தைப் பார்த்துக்கொள்வதும் அவர் வேலை. இதில் அப்படி ஒரு, பிடி சாராக நடித்துள்ளேன். பாசிட்டிவான படம். ஒரு பார்வையாளனாகச் சொல்ல வேண்டும் என்றால், காமெடியான முதல் பாதி, எமோஷலான இரண்டாம் பாதி, நல்ல கிளைமாக்ஸ் என்பேன்.
இந்தக் கதையை இயக்குநர் சொன்னதும் தயாரிப்பாளர் ஐசரிகணேஷ் சாரிடம் கேட்போம் என்றேன். ஏனென்றால் இது கல்வி சிஸ்டம் பற்றி பேசும்படம். அதனால், அவர் தயாரிக்க முன் வருவார் என நினைக்கவில்லை, ஆனால் இந்தக் கருத்தை நாம் தான் சொல்ல வேண்டும் என்று படத்தைத் தயாரித்தார். இந்தக் கதை கல்வியாளராக இருக்கிற, அவர் தயாரிப்பில் வெளிவருவதில் மகிழ்ச்சி. இந்த வருட இறுதியில், வேர்ல்ட் டூர் செல்ல இருக்கிறேன். பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்த இருக்கிறேன்” என்றார்.
» தேர்தலில் வென்றால் சினிமாவுக்கு முழுக்கு: கங்கனா ரனாவத் முடிவு
» கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ ஜூலை 12 உலகமெங்கும் ரிலீஸ் - அதிகாரபூர்வ அறிவிப்பு