திரை விமர்சனம்: குரங்கு பெடல்

By செய்திப்பிரிவு

ஈரோடு மாவட்டம் கத்தேரி கிராமத்தைச் சேர்ந்த 5-ம் வகுப்பு மாணவன் மாரியப்பனும் (மாஸ்டர் சந்தோஷ் வேல்முருகன்) அவனது வகுப்புத் தோழர்களும் சைக்கிள் கற்றுக்கொள்ள விரும்புகின்றனர். மாரியப்பனின் தந்தை கந்தசாமி (காளி வெங்கட்), சிறு வயதில் நிகழ்ந்த விபத்தின் காரணமாக சைக்கிளைத் தொடவே விரும்பாதவர். மகன் வாடகை சைக்கிளுக்கு காசு கேட்கும்போது அவனை விரட்டிவிடுகிறார். இதற்கிடையில் வசதியான குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் நீதி மாணிக்கம், சொந்தமாக சைக்கிள் வாங்கிவிடுகிறான். மாரியப்பனுக்கும் நீதி மாணிக்கத்துக்கும் இடையே யார் முதலில் சைக்கிள் கற்பது என்னும் போட்டி உருவாகிறது. அதில் மாரியப்பன் வென்றானா? மாரியப்பனுக்கும் அவன் தந்தைக்குமான உறவில், சைக்கிள் நிகழ்த்தும் மாற்றம் என்ன? என்பது கதை.

ராசி அழகப்பன் எழுதிய ‘சைக்கிள்’ சிறுகதையை அடிப்படையாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் கமலக்கண்ணன். படம் தொடங்கும்போது மது, புகைக்கு எதிரான எச்சரிக்கை வாசகங்களுக்குப் பதிலாக, விளையாட்டின் நன்மைகளைச் சொல்லும் வாசகங்கள் இடம்பெறுவதில் இருந்து ரசனையான அனுபவத்துக்கு மனம் தயாராகிறது. மனம்போன போக்கில் விடுமுறைக் காலத்தைக் கழித்த 1980-களின் கிராமப்புறக் குழந்தைப் பருவத்தை அசைபோட்டு மனதைக் குளிர்விக்கிறது படம்.

மாரியப்பனுக்கும் அவன் நண்பர்களுக்கும் இடையிலான உரையாடல்களில் வெளிப்படும் குழந்தைப் பருவ வெள்ளந்தித்தனத்தை ரசிக்க முடிகிறது. சைக்கிள் பயில்வதை ஒட்டி வைக்கப்பட்ட காட்சிகளும் அவற்றுக்கான வசனங்களும் கலகலப்பாக எழுதப்பட்டுள்ளன. சைக்கிள் ஓட்டக்கற்பதால் விளையும் நன்மைகளை பிரச்சார நெடியின்றிச் சொல்லி இருப்பது பாராட்டுக்குரியது.

முதல் பாதியில் தொய்வின்றி நகரும் திரைக்கதை இரண்டாம் பாதியில் தடுமாறுகிறது. மாரியப்பன் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்ட பிறகு கதையில் சொல்வதற்கு வலுவான விஷயம் இல்லை. கந்தசாமியின் தவறுகளை மாரியப்பன் சுட்டிக்காட்டும் காட்சி, ரசிக்க வைத்தாலும் அதன் மூலம் சைக்கிள் வாடகைக்காக உண்டியலில் இருந்து பணம் திருடியது, முட்டையைத் திருடியது, சூதாடியது என மாரியப்பன் செய்த தவறுகள் மறக்கடிக்கப்படுவது உறுத்தல்.

முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மாஸ்டர் சந்தோஷ் வேல்முருகன் சிறப்பாக நடித்துள்ளார். சைக்கிள் ஓட்டுவதற்கான ஏக்கத்தையும் அப்பாவின் மீதான அச்சத்தையும் அக்கா, இட்லி சுட்டுத் தரும்போது ஏற்படும் மகிழ்ச்சியையும் கண்களாலேயே கடத்திவிடுகிறார். நண்பர்களாக வரும் பொடியர்களும் நினைவில் நிற்கிறார்கள். காளி வெங்கட் மிகையற்ற நடிப்பால் கவர்கிறார். சைக்கிள் கடை வைத்திருக்கும் மிலிட்டரியாக பிரசன்னா பாலசந்தர், மாரியப்பனின் அம்மா, அக்காவாக நடித்திருக்கும் பெண்கள் கவனம் ஈர்க்கிறார்கள். ஜென்சன் திவாகர் பல இடங்களில் சிரிக்க வைக்கிறார்.

ஜிப்ரான் இசையில் ‘கொண்டாட்டம் விட்ட லீவு’ பாடல் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையும் திரைக்கதையோடு பின்னிப் பிணைந்து பயணிக்கிறது. சுமி பாஸ்கரின் ஒளிப்பதிவு கிராமத்து மண் சாலைகளையும் ஆற்றங்கரையையும் மலைப் பகுதிகளையும் அழகாகப் படம்பிடித்துள்ளது.

இரண்டாம் பாதியில் சில குறைகள் தென்பட்டாலும் அதை மறந்துவிட்டு ரசிக்கலாம். இப்படி ஒரு எளிமையான, அழகான படத்தைத் தயாரித் திருப்பதற்காக நடிகர் சிவகார்த்திகேயன் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்