சென்னை: தரணி இயக்கத்தில் விஜய் நடித்த ‘கில்லி’ திரைப்படம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இது தொடர்பாக ‘கில்லி’ பட நினைவுகளை இயக்குநர் தரணி பகிர்ந்துள்ளார்.
‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், “இன்றைய தலைமுறையினர் படம் பார்த்துவிட்டு, ‘அம்மா, அப்பா சொன்னது சரிதான்’ என படம் நன்றாக இருக்கிறது என்கின்றனர். அன்று படத்தை திரையரங்குகளில் பார்க்கத் தவறியவர்கள் அந்த ‘வைப்’க்காக இன்று திரையரங்குக்குச் சென்று பார்க்கின்றனர். படத்துக்கு இப்படியான வரவேற்பு கிடைக்கும் என நான் நினைத்துப் பார்க்கவில்லை. நம்ப முடியவில்லை. ‘கில்லி 2’ எடுத்தால் என்ன வரவேற்பு இருக்குமோ அப்படி இருக்கிறது” என்றார்.
படம் உருவானது குறித்து பேசுகையில், “தூள் படத்தை முடித்துவிட்டு, ஒருநாள் நானும் உதவி இயக்குநர்களும், மதிய வேளையில் எதாவது படத்துக்கு செல்லலாம் என முடிவெடுத்தோம். அப்போது ‘ஒக்குடு’ போஸ்டரைப் பார்த்துவிட்டு, அந்தப் படத்துக்குச் சென்றோம். படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது, எனக்கு திக் என்று இருந்தது. காரணம், கபடி வீரர் குறித்த கதை ஒன்றை வைத்திருந்தேன். அதேபோல பெண்ணை லைட்ஹவுஸில் மறைத்து வைத்திருக்கும் நாயகன் குறித்த கதையையும் வைத்திருந்தேன். இந்த கதைகள் படத்தில் இருந்தது.
சரி, இந்தப் படத்தை நான் ரீமேக் செய்யவில்லை என்றாலும், யாரோ ஒருவர் செய்யப் போகிறார். எனவே படத்தை பார்த்துவிட்டு, சில மாற்றங்களை செய்து உதவி இயக்குநர்களிடம் சொன்னேன். சிறப்பாக உள்ளது என்றனர். ஏ.எம்.ரத்னத்திடம் ‘ரீமேக் ரைட்ஸ் வாங்கி படம் பண்ணலாம்’ என்றேன். விஜய் நடித்தால் நன்றாக இருக்கும் என நான் கூறியதும், அவர் ஓகே சொன்னார். வித்யாசாகர் உள்ளிட்ட படக்குழுவினர் ‘ஒக்கடு’ பார்த்தனர்.
படம் பண்ணலாம் என முடிவெடுத்துவிட்டோம். பிறகு விஜய்யிடம் சென்று, ‘சில மாற்றங்களை தமிழுக்கு ஏற்றதுபோல செய்திருக்கிறேன். பக்கத்து வீட்டு பையன் என்ற பிம்பத்தை உங்களுக்கு இந்தப் படம் கொடுக்கும்’ என்றேன். அவரும் ஓகே சொன்னார்.
ஆரம்பத்தில் விஜய்யின் அம்மாவாக ஊர்வசியை தேர்வு செய்தோம். தேதிகள் காரணமாக ஒத்துவரவில்லை. பிறகு ஜானகியை தேர்வு செய்தோம். யதார்த்தமாக பிரகாஷ்ராஜிடம் ‘ஹாய் செல்லம்’ அப்படின்னு சொல்லிட்டு போங்க என்றேன். அந்த வார்த்தை மிகப் பெரிய ஹிட்டாகும் என நினைக்கவில்லை. பாடல்களை பொறுத்தவரை வித்யாசாகர் போட்ட முதல் ட்யூனை ஓகே சொல்லிவிட்டேன். இன்றும் படத்தை முதல் தடவை பார்ப்பது போல ரசிகர்கள் கொண்டாடுவது மகிழ்ச்சி” என்றார்.