சைக்கிள் ஓட்டிச் சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு!

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச் சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தமிழகம், புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்.19) காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை முதலே பொதுமக்கள் மற்றும் அரசியல், திரைப் பிரபலங்கள் பலரும் தங்கள் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களித்து செல்கின்றனர். பிற்பகல் 1 மணி நிலவரப்படி தமிழகத்தில் 40.05% வாக்குகள் பதிவாகியுள்ளது.

திரைப் பிரபலங்களைப் பொறுத்தவரை அஜித் தொடங்கி ரஜினி, விஜய், கமல்ஹாசன், தனுஷ், சூர்யா, கார்த்தி, வெற்றிமாறன், பா.ரஞ்சித் உள்ளிட்ட பலரும் வாக்களித்துள்ளனர். அந்த வகையில் நடிகர் விஷால் சென்னை அண்ணாநகரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். முன்னதாக, அவர் கருப்பு டி-சர்ட் அணிந்து கொண்டு, சைக்கிளில் சென்று வாக்களித்தார். அவர் சைக்கிளில் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் நடிகர் விஜய் திடீரென சைக்கிள் ஓட்டிச் சென்று வாக்களித்தார். இது பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பை குறிக்கும் வகையில் அவர் இப்படி செய்ததாக பலரும் கூறிய நிலையில், அதற்கு அறிக்கை வெளியிட்டு விஜய் தரப்பு மறுப்பு தெரிவித்தது. தற்போது விஷாலும் விஜய் பாணியில் சைக்கிளில் சென்று வாக்களித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE