‘அனிமல்’ படத்தை பார்க்க முடிகிறது... ‘சித்தா’வை பார்க்க முடியவில்லையா? - சித்தார்த் ஆதங்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: “ ‘மிருகம்’ (அனிமல்) என டைட்டில் வைத்த படத்தை சென்று பார்க்கிறார்கள். ஆனால், என் படத்தை பார்க்கும்போது தொந்தரவாக உள்ளது என்கிறார்கள்” என நடிகர் சித்தார்த் ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.

‘சித்தா’ படத்துக்காக நடிகர் சித்தாத்துக்கு தனியார் நிறுவனம் சார்பில் விருது வழங்கப்பட்டது. அந்த விருது வழங்கும் விழாவில் பேசிய நடிகர் சித்தார்த் “என்னிடமும், இயக்குநர் அருணிடம் வந்து என்னால் ‘சித்தா’ படத்தை பார்க்க முடியவில்லை. மிகவும் வலித்தது. முகம் சுழிக்க வைத்தது. படத்தை பார்க்க முடியாமல் நான் கண்ணை முடிவிட்டேன் என்று எந்தப் பெண்ணும் கூறியதில்லை. ஆனால், நிறைய ஆண்கள் வந்து சொல்லியிருக்கிறார்கள்.

அந்த ஆண்களால் இதனைப் பார்க்க முடியவில்லை என கூறினார்கள். இந்த மாதிரி படங்களை நான் பார்க்க மாட்டேன் என்றார்கள். ‘மிருகம்’ (அனிமல்) என டைட்டில் வைத்த படத்தை சென்று பார்க்கிறார்கள். ஆனால், என் படத்தை பார்க்கும்போது அவர்களுக்கு தொந்தரவாகிவிட்டதாம். அது தொந்தரவில்லை, வெட்கமும், குற்றவுணர்வும் தான் அது. பரவாயில்லை போகப் போக சரியாகிவிடும்” என பேசியுள்ளார். அவர் பேசிய இந்த காணொலியை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE