துல்கரை தொடர்ந்து ‘தக் லைஃப்’ படத்தில் இருந்து ஜெயம் ரவி விலகல்?

By செய்திப்பிரிவு

சென்னை: கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படத்தில் இருந்து நடிகர் ஜெயம் ரவி விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, துல்கர் சல்மான் கால்ஷீட் காரணமாக விலகியது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் மணிரத்னமும் கமல்ஹாசனும் ‘நாயகன்’ படத்துக்குப் பிறகு இணையும் படம், ‘தக் லைஃப்’. இதில் த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜூ ஜார்ஜ், கவுதம் கார்த்திக் உட்பட பலர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி சில நாட்கள் நடந்தது. பின்னர் கமல்ஹாசன் சொந்த வேலை காரணமாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு செர்பியாவில் நடைபெற உள்ளது. இந்நிலையில், நடிகர் ஜெயம் ரவி இப்படத்தில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காரணம், படக்குழு அவரிடம் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் படப்பிடிப்புக்கான தேதிகள் கேட்டிருந்ததாகவும், ஆனால் கமல்ஹாசனின் வேலைப்பளு காரணமாக திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடக்கவில்லை என்பதால், அடுத்து வரும் நாட்களில் ஜெயம் ரவியின் மற்ற படப்பிடிப்புகள் இருப்பதால் அவர் ‘தக் லைஃப்’ படத்தில் இருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது.

ஜெயம் ரவி அடுத்து ‘ஜெனி’, ‘பிரதர்’, ‘காதலிக்க நேரமில்லை’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். முன்னதாக, ‘தக் லைஃப்’ படத்திலிருந்து துல்கர் சல்மான இதேபோல கால்ஷீட் பிரச்சினை காரணமாக விலகியது குறிப்பிடத்தக்கது. மேலும் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்போ அல்லது மாற்று நடிகர்களின் அறிவிப்போ வெளியாகலாம் என கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE