“சேச்சி...சேட்டன்மார்களே!” - மலையாளத்தில் பேசிய விஜய்

By செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: ‘தி கோட்’ படத்தின் படப்பிடிப்புக்காக கேரளா சென்றுள்ள நடிகர் விஜய், அங்கு குழுமியிருந்த ரசிகர்களிடையே மலையாளத்தில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது.

கடைசியாக விஜய் கடந்த 2011-ம் ஆண்டு இயக்குநர் சித்திக் இயக்கத்தில் வெளியான ‘காவலன்’ படத்தின் படப்பிடிப்புக்காக 2010-ம் ஆண்டு நடிகர் விஜய் கேரளா சென்றார். அதன் பிறகு அவர் எந்த படத்தின் படப் பிடிப்புக்காகவும் கேரளா செல்லவில்லை. தற்போது இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் கேரளாவின் திருவனந்தபுரத்தில் படமாக்கப்பட உள்ளது. இதனால், 14 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் விஜய் கேரளா சென்றடைந்தார். அங்கு அவர் சென்ற முதல் நாளே ரசிகர்கள் கூட்டம் திரண்டு அவருக்கு உற்சாக வரவேற்பளித்தது.

இந்நிலையில் படப்பிடிப்புக்கு இடையே கேரவனின் மேல் ஏறி ரசிகர்களிடையே நடிகர் விஜய் மலையாளத்தில் பேசினார். அவர் பேசுகையில், “சேச்சி சேட்டன்மார்களே, உங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. ஓணம் பண்டிகையில் நீங்கள் எந்த அளவுக்கு சந்தோஷமாக இருப்பீர்களோ, அதே அளவுக்கு சந்தோஷத்துடன் உங்களை பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எல்லோருக்கும் கோடான கோடி நன்றிகள். தமிழ்நாட்டில் என்னுடைய நண்பா, நண்பிகளைப்போல நீங்கள் வேற லெவல். எல்லோருக்கும் கோடான கோடி நன்றிகள்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE