ஜயக்கொடி: தமிழ் சினிமாவின் முதல் அதிரடி நாயகி நடித்த படம்

By செய்திப்பிரிவு

இப்போது வரை தீராத பிரச்சினையாகவே இருக்கிறது வரதட்சணை. இதுதொடர்பான செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. காலங்காலமாகத் தொடரும் இந்தப் பிரச்சினையைச் சுதந்திரத்துக்கு முன்பே அதிரடியாகப் பேசிய படம், ‘ஜயக்கொடி’.

1940 மற்றும் 50-களில் தமிழ், இந்தி படங்களைத் தயாரித்து, இயக்கி, நடித்து வந்தவர், மும்பையைச் சேர்ந்த பாக்வன். இவரை ‘பாக்வன் தாதா’ என்றும் சொல்வார்கள். அந்தக் காலகட்டத்தில் 25 அறைகள் கொண்ட அவர் பங்களாவில் ஏழு சொகுசு கார்கள் நிற்கும். தினம் ஒரு காரை பயன்படுத்துவார். அப்படிப்பட்ட பாக்வன் இயக்கி வெற்றி பெற்ற தமிழ்ப் படம், 1941-ம் ஆண்டு வெளியான ‘வனமோஹினி’. அதற்கு முன் அவர், எழுதி இயக்கிய படம் ‘ஜயக்கொடி’. இதில், கே.டி.ருக்மணி, கே.நடராஜன், குளத்து மணி, பாபு, கே.கோகிலா, கே.டி.சக்குபாய், எஸ்.பாஷா உட்பட பலர் நடித்தனர்.

கே.டி.ருக்மணி நாயகியாக நடித்தார். இவர் ராபின்ஹூட் பட பாணியில் உருவான ‘மின்னல் கொடி’ படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்து அசத்தியவர். தமிழ் சினிமாவின் முதல் அதிரடி கதாநாயகி என்று புகழப்பெற்றவர். நாயகனாக நடித்த கே.நடராஜன், இந்தப் படத்துக்குப் பிறகு ‘ஜயக்கொடி’ நடராஜன் என்றே அழைக்கப்பட்டார். பி.வி.சாமி, எஸ்.ஆர்.சாரங்கன் வசனங்களை எழுதினர். அஹமத்துல்லா ஒளிப்பதிவு செய்த இந்தப் படத்துக்கு சி.ராமச்சந்திரா இசை அமைத்தார். பாடல்களை சி.முருகேசன் எழுதினார்.

வரதட்சணை கொடுக்க முடியாததால் ஏழைப்பெண் ராஜத்துக்கு (ருக்மணி), திருமணமாகவில்லை. இதற்கிடையே பண ஆசைகொண்ட கந்துவட்டிக்காரன், ராஜமின் தந்தையைக் கொன்று வீட்டுக்கு தீ வைக்கிறான். இதனால் ஆவேசம்கொள்ளும் ராஜம், வரதட்சணைக்கு எதிராகக் களமிறங்குகிறாள். வரதட்சணை கேட்கும் மணமகன்கள் மர்மமான முறையில் மறைந்துபோகிறார்கள். மக்கள் ஆச்சரியப்படுகிறார்கள். பிறகு என்ன நடக்கிறது என்று கதை செல்லும்.

இந்தப் படம் அந்த காலகட்டத்தில் வரவேற்பைப் பெற்றது. மக்கள் பரபரப்பாகப் பேசிக்கொண்டார்கள். ருக்மணியின் நடிப்பும் அவரின் ஆக்‌ஷன் காட்சிகளும் அதிகம் ரசிக்கப்பட்டன. 1940-ம் ஆண்டு இதே தேதியில் வெளியான இந்தப் படத்தின் பிரின்ட் இப்போது இல்லை என்பது துரதிர்ஷ்டம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE