‘கார்டியன்’ படத்துக்காக ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்த ஹன்சிகா

By செய்திப்பிரிவு

சென்னை: ஹன்சிகா மோத்வானி நாயகியாக நடித்துள்ள ஹாரர் படம், ‘கார்டியன்’. இதை ‘கூகுள் குட்டப்பா’ படத்தை இயக்கிய சபரி - குரு சரவணன் இணைந்து இயக்கியுள்ளனர். சிம்பு நடித்த ‘வாலு’, விஜய் சேதுபதி நடித்த ‘சங்கத்தமிழன்’, விக்ரம் நடித்த ‘ஸ்கெட்ச்’ படங்களை இயக்கிய விஜய் சந்தர், தனது ஃபிலிம் ஒர்க்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். சுரேஷ் மேனன், மன், தங்கதுரை, குழந்தை நட்சத்திரம் கிருஷி உட்பட பலர் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு கே.ஏ.சக்திவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார். வரும் 8-ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படம் பற்றி ஹன்சிகா கூறியதாவது:

அரண்மனை 1, அரண்மனை 2 படங்களுக்குப் பிறகு மீண்டும் இந்த ஹாரர் படத்தில் நடித்துள்ளேன். நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதை. இதில் பேய் கேரக்டரிலும் நடித்துள்ளேன். அந்த கேரக்டருக்காக, கண்களில் விதவிதமான லென்ஸ் பயன்படுத்தி நடித்தேன். அப்படி நடித்துவிட்டுப் பார்த்தால் அரைமணி நேரம் கண்ணே தெரியாது. இரண்டாம் பாதியில் சில காட்சிகள் கல்லறை தோட்டத்தில் எடுக்கப்பட்டன. இரவு 12 மணிக்கு மேல் அந்தக் காட்சியை எடுத்தார்கள். அந்தரத்தில் தொங்கி பேயாகக் கத்தியபடி ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்துள்ளேன். அது சவாலாக இருந்தது. அந்த நேரத்தில், மேக்கப் போட்ட என் முகத்தைப் பார்க்க எனக்கே பயமாக இருந்தது. திருமணத்துக்குப் பிறகு நடிப்பதில் எனக்கு எந்த வித்தியாசமும் இல்லை. அம்மாவும் கணவரும் ஆதரவாக இருக்கிறார்கள். இந்தப் படத்தை அடுத்து, என் நடிப்பில் காந்தாரி, தி மேன் படங்கள் வெளியாக இருக்கின்றன.

இவ்வாறு ஹன்சிகா கூறினார்.

இயக்குநர்கள் சபரி–குரு சரவணன் கூறும்போது, “இது வழக்கமான ஹாரர் படமாக இருக்காது. குடும்பத்தோடு பார்க்கும் படமாக இருக்கும். ஹன்சிகாவின் நடிப்பு, சாம்.சி.எஸ்.சின் பின்னணி இசை, காமெடி இந்தப் படத்துக்குப் பலமாக அமைந்திருக்கிறது. கிராபிக்ஸ் காட்சிகள் பிரம்மாண்டத்தைக் கொடுத்திருக்கிறது” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE