அம்பானி மகன் திருமண முன்வைபவத்தில் ரஜினி!

By செய்திப்பிரிவு

ஜாம்நகர்: முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் வரவேற்பு விழா நிகழ்வில் பாரம்பரிய முறைப்படி வேட்டி மற்றும் சட்டை அணிந்தபடி நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றார்.

குஜராத் மாநிலம் ஜாம்நகரில் வெகு விமரிசையாக இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விரென் மெர்ச்சண்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் திருமணத்துக்கு முந்தைய வரவேற்பு விழா நிகழ்வு மூன்று நாட்களுக்கு திட்டமிடப்பட்டு, வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு துறை பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். மார்ச் 1 முதல் 3-ம் தேதி வரையில் இந்த நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் இந்திய திரைத்துறையின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் ரஜினிகாந்த், தனது மனைவி லதா ரஜினிகாந்த் மற்றும் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உடன் கலந்து கொண்டார். பாரம்பரிய உடை அணிந்து மூன்றாம் நாள் நிகழ்வில் விருந்தினர்கள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி வேட்டி மற்றும் சட்டை அணிந்து இதில் ரஜினிகாந்த் பங்கேற்றார். அவரது மனைவி மற்றும் மகள் என இருவரும் சிவப்பு நிற புதியவை அணிந்து வந்திருந்தனர்.

இதில் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ், மெட்டா நிறுவனர் மார்க் ஸூகர்பெர்க், பாப் பாடகி ரிஹானா, அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்பின் மகள் இவாங்கா ட்ரம்ப், கிரிக்கெட் வீரர்கள் சச்சின், தோனி, ரோகித், ஹர்திக் பாண்டியா, பிராவோ, ரஷித் கான், சினிமா பிரபலங்கள் ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான், தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ராம் சரண் ஆகியோர் பங்கேற்றனர். இதனால் ஜாம்நகர் விழாக்கோலம் பூண்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE