“அடுத்த 3 ஆண்டுகளில் ஹாலிவுட்தான்” - இயக்குநர் அட்லீ உற்சாகம் 

By செய்திப்பிரிவு

மும்பை: “பாலிவுட்டை அடைய எனக்கு 8 வருடங்கள் தேவைப்பட்டன. அடுத்த 3 வருடங்களில் ஹாலிவுட்டில் மிகப் பெரிய அறிவிப்பை நீங்கள் எதிர்பார்க்கலாம்” என இயக்குநர் அட்லீ தெரிவித்துள்ளார்.

இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அட்லீ, “என்னுடைய முதல் நாள் ஷூட்டிங் இன்னும் நினைவிருக்கிறது. இந்தியாவின் மிகப் பெரிய இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது ‘எந்திரன்’ படத்துக்காக செட்டுக்கு ரஜினிகாந்த் வந்திருந்தார். அவரைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தேன். என் வாழ்வில் எப்போதும் அற்புதங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கும். மிகப் பெரிய இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்து, ரஜினியைப் பார்த்திருக்கிறேன். விஜய்யை வைத்து படம் இயக்கியிருக்கிறேன். இப்போது ஷாருக்கான். என் வாழ்வில் அற்புதங்கள் நிகழ்ந்துகொண்டேயிருக்கின்றன” என்றார்.

அவரிடம், “ஹாலிவுட் படத்தை இயக்கப் போகிறீர்களா?” என கேட்கப்பட்டதற்கு, “ஆம். பாலிவுட்டை அடைவதற்கு எனக்கு 8 வருடங்கள் தேவைப்பட்டன. அடுத்த 3 வருடங்களில் ஹாலிவுட்டில் இருந்து மிகப்பெரிய ஒரு அறிவிப்பை நீங்கள் காண முடியும்” என்றார்.

தொடர்ந்து, அவரது படங்களின் வன்முறை காட்சிகள் குறித்த கேள்விக்கு, “ஒரு செய்திச் சேனலை எடுத்துக் கொள்ளுங்கள். அது ஏன் வன்முறைக் காட்சிகளை வெளியிடுகிறது. உலகுக்கு உண்மையை வெளிச்சமிட்டுக் காட்ட வேண்டும் என்பதற்காக. அப்படிப் பார்க்கும்போது வன்முறை எதற்காக பயன்படுத்தப்படுகிறது என்பது தான் விஷயம். உதாரணமாக ‘ஜவான்’ படத்தை எடுத்துக்கொள்வோம். விவசாயிகள் தற்கொலை குறித்து நாம் செய்தித்தாள்களில் படித்திருப்போம்.

நானும் ஒரு ஊடகவியலாளன்தான். எனக்கும் குரல் கொடுக்க வேண்டிய தேவை உள்ளது. ஓர் இயக்குநராக அதே செய்தியை நான் விஷுவலாக கொண்டு விவசாயி தற்கொலை செய்வது போல காட்டினால், அது உங்கள் இதயத்தை தேய்க்கும். மாற்றத்தை உருவாக்கும். அதனால் அந்த இடத்தில் நான் என்னுடைய குரலை பயன்படுத்துகிறேன்.

சிலசமயங்களில் வன்முறை என்பது மருத்துவரின் ஊசி போன்றது. மாத்திரைகள் மூலம் அனைத்து நோய்களுக்கும் சிகிச்சையளிக்க முடியாது. அதைப்போல தான் வன்முறையும். அது யாரையும் தூண்டுவதற்காக பயன்படுத்தப்படுவதல்ல.

உதாரணமாக என் படங்களில் ஒரு நாய் கொல்லப்பட்டால், அதனை கொன்றவரை குற்றவாளியாக சித்தரிக்கிறேன் என்றால், நாயையோ, செல்லப் பிராணியையோ யாரேனும் கொன்றால், அவர் மனித்தன்மை கொண்டவரல்ல என்பதை இந்த தலைமுறைக்குக் கற்பிக்க விரும்புகிறேன். துரதிர்ஷ்டவசமாக இவை அனைத்துமே வன்முறையாக சித்தரிக்கப்படுகிறது என்பது தான் கசப்பான உண்மை” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE