“மதத்தையும் நம்பிக்கையையும் மனசுல வை” - ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ‘லால் சலாம்’ ட்ரெய்லர் எப்படி?

By செய்திப்பிரிவு

சென்னை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள ‘லால் சலாம்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள படம், ‘லால் சலாம்'. இந்தப் படத்தில் ‘மொய்தீன் பாய்’ என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். லைகா சார்பில் சுபாஷ்கரன் படத்தை தயாரித்துள்ளார். ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழகத்தில் படத்தை வெளியிடுகிறது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

ட்ரெய்லர் எப்படி?: ஊரில் நடக்கும் தேர் திருவிழாவில் பிரச்சினை நடக்கிறது. அதையொட்டி கிரிக்கெட் போட்டிகளும் காட்டபடுகின்றன. ‘கூட்டம் சேர்க்குறவன விட, யார் பின்னாடி கூட்டம் சேருதோ அவன் ரொம்ப ஆபத்தானவன்’ வசனத்துக்குப் பிறகான மொய்தீன் பாயாக ரஜினியின் என்ட்ரி மாஸூக்கு உத்தரவாதம் அளிக்கிறது. உள்ளூரில் நடைபெற்று வரும் கதை ஒரு கட்டத்தில் பம்பாயை நோக்கி நகர்வதாக தெரிகிறது. இந்த இரண்டுக்குமான கனெக்ஷன், கதையில் ரஜினியின் பங்கு, கிரிக்கெட்டுக்கான முக்கியத்துவம் இவையெல்லாம் எந்த புள்ளியில் ஒன்றிணையும் என பல கேள்விகளை எழுப்புகிறது ட்ரெய்லர்.

செந்திலின் கதாபாத்திரம் படத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதை காட்சிகள் உறுதி செய்கின்றன. ‘எந்த ஊர் சாமியா இருந்தாலும், யார் கும்புட்ற சாமியா இருந்தாலும், சாமி சாமிதான்’, என்ற வசனமும் இறுதியில் ரஜினி பேசும், ‘மதத்தையும், நம்பிக்கையையும் மனசுல வை, மனித நேயத்த அதுக்கு மேல வை. அதான் இந்த நாட்டோட அடையாளம்’ வசனமும் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ளது. ‘பம்பாய்ல பாய் ஆளே வேறடா’ என சொல்லும்போது மீண்டும் ‘பாட்ஷா’வுக்குப்பிறகு பம்பாயில் ரஜினி அடையாளம் கவனிக்க வைக்கிறது. விக்ராந்த் கதாபாத்திரத்துக்கான காட்சிகள் பெரிய அளவில் தென்படவில்லை. படம் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

ட்ரெய்லர் வீடியோ:

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE