“4 வருடங்கள் இடைவெளி வேண்டாம் என்றனர்” - ‘கம்பேக்’ குறித்து ஷாருக்கான் நெகிழ்ச்சி 

By செய்திப்பிரிவு

மும்பை: “4 வருடங்கள் இடைவெளி எடுக்க வேண்டாம். 4 மாதங்கள் பரவாயில்லை என கூறி என்னை ரசிகர்கள் நெகிழ வைத்துவிட்டனர்” என்று நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ரசிகர்களைச் சந்தித்துப் பேசினார். மும்பையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அவர், “படம் சரியாக வந்திருக்கிறது என நம்பினாலும் உங்களுக்குள் ஒரு சிறு பதட்டம் இருக்கும். என்னுடைய முந்தைய படங்கள் சரியாக போகாததால், நாம் நல்ல படங்களை எடுக்கவில்லை என நினைத்தேன். ஆனால் எனது படங்களை விட ‘பதான்’, ‘ஜவான்’, ‘டன்கி’-யை மக்கள் அதிகமாக நேசித்தார்கள் என நினைக்கிறேன்.

இந்தியாவிலும், வெளியிலும் உள்ள மக்கள் “4 வருடங்கள் இடைவெளி எடுக்க வேண்டாம். 4 மாதங்கள் பரவாயில்லை” என்று கூறி என்னை நெகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டனர். எனவே, நான் செய்வது சரி, அதைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்று எனக்கு உணர்த்தியதற்காக உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி” என்றார்.

ஷாருக்கான் கம்பேக்: பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு (2023) ஜனவரியில் வெளியான படம் ‘பதான்’. தொடர்ந்து செப்டம்பரில் ‘ஜவான்’, டிசம்பரில் ‘டன்கி’ என ஒரே ஆண்டில் 3 படங்களை வெளியிட்டு அசத்தினார். முதல் 2 படங்கள் ரூ.1000 கோடி வசூலைத் தாண்டின. ‘டன்கி’ ரூ.500 கோடியைத் தாண்டியது. ஷாருக்கானின் இந்த ‘கம்பேக்’ அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. அவர் அடுத்து நடிக்க உள்ள படங்கள் குறித்து அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE