“மீண்டும் இந்த காம்போ அமைய சந்தானத்திடம் தான் கேட்க வேண்டும்”: ‘சிவா மனசுல சக்தி’ ரீ-ரிலீஸ் நிகழ்வில் ஜீவா பேச்சு

By செய்திப்பிரிவு

சென்னை: “மீண்டும் இப்படியொரு படம் எடுப்பதற்கு நாங்கள் ரெடியாக இருக்கிறோம். இந்த கேள்வியை சந்தானத்திடம் தான் நீங்கள் கேட்க வேண்டும்” என நடிகர் ஜீவா கூறியுள்ளார்.

கடந்த 2009-ம் ஆண்டு எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் திரையரங்குகளில் வெளியான படம் ‘சிவா மனசுல சக்தி’. இப்படம் சென்னை வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் ரி-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி படக்குழுவினர் கமலா திரையரங்குக்கு வருகை தந்தனர். அப்போது பேசிய நடிகர் ஜீவா, “15 வருடத்துக்குப் பிறகு படம் மீண்டும் திரையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படம் ஒரு வைப். முதல் நாள் படம் வெளியாகும்போது, ‘கூட்டம் வரவில்லையே’ என பேசிக்கொண்டிருந்தோம். அடுத்தடுத்த வாரங்களில் படம் நன்றாக பிக்-அப் ஆனது.

மீண்டும் அப்படியொரு படத்தை எடுங்கள் என பலரும் கேட்கிறார்கள். இன்றைக்கு பார்க்கும்போது யுவன்சங்கர் ராஜாவின் இசை பிரஷ்ஷாக உள்ளது. அவருக்கு நன்றி. பார்வையாளர்களுக்கு இன்னும் சிறப்பான படங்களை கொடுக்கவேண்டும். மீண்டும் இப்படியொரு படம் எடுப்பதற்கு நாங்கள் ரெடியாக இருக்கிறோம். சந்தானத்திடம் தான் கேட்க வேண்டும்” என்றார்.

இயக்குநர் எம்.ராஜேஷ் பேசுகையில், “கிட்டத்தட்ட 15 வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தை மீண்டும் திரையரங்கில் அமர்ந்து பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இப்படம் வெளியானபோது முதல் நாள் முதல் காட்சியை என்னால் பார்க்க முடியவில்லை. இன்றைக்கு பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கிட்டத்தட்ட 15 வருடத்துக்குபிறகும் மக்கள் ஆதரவு கொடுப்பது மகிழ்ச்சி. இன்று படம் பார்க்க வந்தவர்களில் பலர் இப்படம் ரிலீசான நேரத்தில் பிறந்திருப்பார்களா என்பது கூட தெரியவில்லை” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE