பிருத்விராஜ், யோகிபாபு, பசில் ஜோசப்பின் ‘குருவாயூர் அம்பலநடையில்’ முதல் தோற்றம் வெளியீடு

By செய்திப்பிரிவு

சென்னை: மலையாள படமான ‘குருவாயூர் அம்பலநடையில்’ (Guruvayoor Ambalanadayil) படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு இயக்குநர் விபின் தாஸ் இயக்கத்தில் வெளியான மலையாள படம் ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’. இப்படம் மலையாள ரசிகர்கள் தாண்டி பலரின் கவனத்தையும் ஈர்த்து பாராட்டைப் பெற்றது. இந்நிலையில் இயக்குநர் விபின் தாஸ் அடுத்ததாக இயக்கியுள்ள படம் ‘குருவாயூர் அம்பலநடையில்’. இந்தப் படத்தில் பசில் ஜோசப், பிருத்விராஜ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் யோகிபாபுவும் இணைந்துள்ளார்.

இதன் மூலம் மலையாளத்தில் நடிகராக அறிமுகமாகிறார் யோகிபாபு. மேலும், நிகிலா விமல், அனஸ்வர ராஜன், ஜெகதீஷ், ரேகா, சிஜு சன்னி, இர்ஷாத் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடிக்கின்றனர். அங்கித் மேனன் இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டு மே மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. தற்போது படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

முதல் தோற்றம் எப்படி? - குடும்பம் சார்ந்த திருமண கதையை அடிப்படையாக கொண்ட இப்படத்தின் முதல் பார்வையில் பெரும் கூட்டம் ஒன்று நின்றுகொண்டிருக்கிறது. தனது முந்தையப் படத்தில் இந்திய திருமண அமைப்பு முறையை சாடிய விபின் தாஸ் இந்தப் படத்திலும் திருமண விவகாரங்களை கையிலெடுத்துள்ளதை முதல் தோற்றம் உணர்த்துகிறது. படத்தின் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE